சனி, 18 ஜூன், 2022

பாரதியார் - எங்கள் தாய்


தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!


(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணர்ந்தோரும் பல கல்வி கற்றவர்களும் இவள் எக்காலத்தில் தோன்றினாள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவளாக விளங்குபவள் எங்கள் தாய்)

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்

(எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் இந்த உலகில் எப்போதும் ஒரு கன்னிகை போல் இருப்பாள் எங்கள் தாய்)

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்

(முப்பது கோடி மக்களை உடையவள் - தற்போது நூறு கோடிக்கும் மேலாகச் சென்றுவிட்டது - ஆனாலும் உயிர் எல்லோரிடமும் சேர்ந்து ஒரே உயிராக உடையவள். இவள் பேசுகின்ற மொழிகள் பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருக்கிறாள்)

நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

(இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள்)

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்

(அறுபது கோடி நீண்ட வலிமையான கைகளாலும் எல்லாவித அறங்களையும் நடத்துகிறாள் எங்கள் தாய். தன்னை அழிக்க விரும்பி யாராவது வந்தால் அவர்களை தூள் தூளாக்கி ஒழித்துவிடுவாள் எங்கள் தாய்.)

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடும் கார் கொடும்
துர்க்கை அனையவள் தாய்

(பூமியை விட பொறுமையில் சிறந்தவள். பெரும் புண்ணியம் செய்யும் மனத்தை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் அவளுக்குக் குற்றம் இழைப்பவர் முன் நிற்கும் கரிய கொடிய துர்க்கையைப் போன்றவள் எங்கள் தாய்.)

கற்றை சடைமதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் - கையில்
ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும்
ஒருவனையும் தொழுவாள்

(கற்றைச் சடையையும் நிலவையும் தலையில் வைத்திருக்கும் துறவியாம் சிவபெருமானைக் கைதொழுவாள் எங்கள் தாய். கையில் தன்னிகரில்லா ஆயுதமாம் சக்கரத்தை வைத்திருக்கும் ஒருவனாம் பெருமாளையும் தொழுவாள்)

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறிவாள் - உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்

(யோகங்களிலே நிகரில்லாதவள். உண்மையாம் இறை ஒன்று தான் என்பதை நன்கு அறிவாள். உயர்ந்த போகங்களிலேயும் நிறைவுடையவள். எண்ணி மாளா பொற்குவை (செல்வங்கள்) உடையவள்)

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

(நல்லறம் நாடிய மன்னர்களை வாழ்த்தி நல்லதைப் புரிவாள் எங்கள் தாய். அவர்கள் கெட்டவர்கள் ஆயின் அவர்களை அழித்துப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்)

வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறன்மகளாம் எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்

(வெண்ணிறம் கொண்ட இமயமலை தந்த மகளாம் எங்கள் தாய். அந்த இமயத்தின் திண்மை குறைந்தாலும் தான் மறையாத திண்மையுடையவள்; தினமும் மேன்மேலும் சீர்களைப் பெறுவாள் எங்கள் தாய்.)

பாடல் காணொலி


பார்வை
http://koodal1.blogspot.com/2010/05/blog-post_18.html 
https://www.youtube.com/watch?v=haC_xXmSbwo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன