பாரதியார் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 டிசம்பர், 2025

திருக்குற்றாலக் குறவஞ்சி: மலைவளம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

மலைவளம் (பாடல் விளக்கம் & வினாக்களுடன்)
நூலாசிரியர்: திரிகூட ராசப்பக் கவிராயர்
முன்னுரை: தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள குற்றாலத்தின் இயற்கை எழிலையும், அங்கு வீற்றிருக்கும் குற்றாலநாதரின் சிறப்பையும் இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. குறத்தி தன் மலைவளத்தை எடுத்துரைக்கும் சுவையான பகுதி இது.
பாடல் 1
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார் கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர் குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே;
விளக்கம் காண இங்கே சொடுக்கவும்
ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்து பெண் குரங்குகளுக்குக் கொடுத்து கொஞ்சி மகிழும். அப்போது சிதறும் பழங்களுக்காக தேவர்கள் கெஞ்சுவார்கள். வேடர்கள் தேவர்களை அழைப்பார்கள். சித்தர்கள் மூலிகைகளை வளர்ப்பார்கள். அருவி நீர் மேலே எழும்பி வானில் பாய்வதால், சூரியனின் தேர்க்குதிரைகளும் சக்கரங்களும் வழுக்கி விழும். இத்தகைய சிறப்புமிக்க குற்றாலமலையே எங்கள் மலையாகும்.
பாடல் 2
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும் முற்றம்எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும் கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம் கிம்புரியின் கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம் செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும் தேன்அலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும் வழங்குகொடை மகராசர் குறும்பலவின் ஈசர் வளம்பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே;
விளக்கம் காண இங்கே சொடுக்கவும்
அருவி முத்துக்களைச் சுமந்து வந்து பெண்களின் சிறுவீடுகளை அழிக்கும். நாங்கள் கிழங்கு தோண்டி, தேன் எடுத்து வளம் பாடுவோம். யானைக் கொம்புகளால் தினை இடிப்போம். குரங்குகள் மாம்பழங்களை பந்தாக வைத்து விளையாடும். செண்பகப் பூவின் மணம் வானுலகம் வரை வீசும். குறும்பலா ஈசர் வாழும் திரிகூட மலையே எங்கள் மலையாகும்.
பாடல் 3
ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும் அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும் வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும் விந்தைஅகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும் காடுதொறும் ஓடிவரை ஆடுகுதி பாயும் காகமணு காமலையில் மேகநிரை சாயும் நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர் நிலைதங்கும் திரிகூடமலை எங்கள் மலையே;
விளக்கம் காண இங்கே சொடுக்கவும்
பாம்புகள் கக்கிய மாணிக்கங்கள் ஒளி வீசும். யானைகள் நிலவை உணவு உருண்டை என நினைத்து வழி மறிக்கும். சந்தனம், அகில் மணம் வீசும். வரையாடுகள் துள்ளி குதிக்கும். காகம் கூட அணுக முடியாத உயரமான மலையில் மேகங்கள் தங்கும். இதுவே எங்கள் திரிகூட மலையாகும்.
பாடல் 4
கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும் துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே;
விளக்கம் காண இங்கே சொடுக்கவும்
கயிலை மலைக்குத் தெற்கிலும், சிவசைல மலைக்கு வடக்கிலும் உள்ள மலை இது. மேரு மலை போல உயர்ந்தது. எல்லா மலைகளின் சிறப்பையும் தன்னுள் கொண்டது. வைரம், மாணிக்கம் விளைவது. சூரியன் இதன் குகைகளில் நுழைந்து செல்வான். திருமால் தேடும் திரிகூடநாதர் மலை இதுவே.
பாடல் 5
கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும் திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே;
விளக்கம் காண இங்கே சொடுக்கவும்
குறத்தி தன் உறவு முறைகளை மலைகளோடு ஒப்பிடுகிறாள். கொல்லிமலை தங்கைக்கும், பழனிமலை கணவனுக்கும், விந்தைமலை தந்தைக்கும், இமயமலை அண்ணனுக்கும், சுவாமிமலை மாமியாருக்கும், வேள்விமலை தோழிக்கும் உரியது. ஆனால் மேகங்கள் முழங்க மயில்கள் ஆடும் இந்தத் திரிகூடமலையே எங்கள் செல்வ மலையாகும்.
பாடல் 6
ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்வோம் உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள் வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி வேங்கையாய் வெயில்மறைந்த பாங்குதனைக்குறித்தே அருள்இலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம் ஆதினந்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம் பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம் பரமர்திரி கூடமலை பழையமலை அம்மே.
விளக்கம் காண இங்கே சொடுக்கவும்
நாங்கள் வேறு குலத்தில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டோம். நட்பு கொண்டால் விடமாட்டோம். ஆனால், முன்பு முருகப்பெருமானுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுத்தோம். அதற்குச் சீதனமாகப் பல மலைகளைக் கொடுத்தோம். மேருமலையைத் துருவனுக்குக் கொடுத்தோம். ஆனால் பரமர் வாழும் இந்தத் திரிகூடமலை எங்கள் பழைய பூர்வீக மலையாகும்.

பயிற்சி வினாக்கள்

கீழே உள்ள வினாக்களைப் படித்து, விடையைக் காண அதனைச் சொடுக்கவும்.

1. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்?
விடை: திரிகூட ராசப்பக் கவிராயர்.
2. 'வானரங்கள் கனிகொடுத்து' எனத் தொடங்கும் பாடலில், வானரங்கள் எவற்றுடன் கொஞ்சும்?
விடை: மந்தி (பெண் குரங்கு).
3. தேனருவித் திரை எழும்பி எதன் வழி ஒழுகும் என்று கூறப்பட்டுள்ளது?
விடை: வானின் வழி (வானுலகம் வரை எழும்பிப் பாயும்).
4. குறும்பலா ஈசர் எழுந்தருளியுள்ள மலை எது?
விடை: திரிகூட மலை (குற்றால மலை).
5. கயிலை மலைக்குத் தெற்கிலும், சிவசைல மலைக்கு வடக்கிலும் உள்ள மலை எது?
விடை: திரிகூட மலை.
6. குறவர்கள் யாருக்குப் பெண் கொடுத்ததாகக் குறத்தி கூறுகிறாள்?
விடை: முருகப் பெருமானுக்கு (வள்ளியைத் திருமணம் செய்து கொடுத்தனர்).

தொகுப்பும் வடிவமைப்பும்: முனைவர் சத்தியராசு தங்கச்சாமி (நேயக்கோ)
தமிழ் உதவிப்பேராசிரியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.

செவ்வாய், 25 நவம்பர், 2025

பிள்ளைச் சிறு விண்ணப்பம் - வள்ளலார்

திருவருட்பா

ஆறாம் திருமுறை - 19. பிள்ளைச் சிறு விண்ணப்பம்
அருளியவர்: வள்ளலார் (இராமலிங்க அடிகளார்)

"பிள்ளைச் சிறு விண்ணப்பம்" என்பது வள்ளலார் பெருமான் இறைவனிடம் ஒரு குழந்தையைப் போல உரிமையுடன் முறையிடும் அற்புதமான பதிகமாகும். தாயும் தந்தையுமான இறைவனிடம், தன் பிழைகளைப் பொறுத்து அருளுமாறு அவர் வேண்டும் இப்பாடல்கள், படிப்பவர் மனதை உருக்கக்கூடியவை.


குறிப்பு: இப்பாடல்கள் "எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்" வகையைச் சார்ந்தவை.
பாடல் 1
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: ஒரு மகனைத் தந்தை அடித்தால், தாய் அவனை அணைத்து ஆறுதல் கூறுவாள். தாய் அடித்தால், தந்தை அவனை அணைத்துக் கொள்வார். ஆனால் எனக்குத் தந்தையும் தாயும் நீயே (சிவபெருமானே)! திருநீறு அணிந்த திருமேனியுடன் அம்பலத்தாடும் புனிதனே! நீ என்னைச் சோதித்து அடித்தது போதும்; இனி தாங்க மாட்டேன். என்னை அணைத்து அருள வேண்டும்.
பாடல் 2
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான் குறிக்கொண்ட கொடியனேன்குணங்கள் முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென் முனிவுதீர்ந்தருளே.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: பிள்ளைகளின் குணங்களைப் பெற்றவர்களே அறிவார்கள்; மற்றவர் அறிய மாட்டார்கள். என்னைப் பெற்றெடுத்த வள்ளலே! மன்றிலே நடிக்கும் அரசே! எண் குணங்களை உடையவனே! தீய குணங்களைக் கொண்ட என் குணங்களை நீ முழுமையாக அறிவாய். அப்படி அறிந்திருந்தும் என் மீது நீ கோபம் கொள்வது ஏன்? சினத்தைத் தவிர்த்து எனக்கு அருள் செய்வாயாக.
பாடல் 3
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச் சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன் செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: கொடுமையான புத்தியை உடைய மகன், தீய செயல்களைச் செய்ய விரும்பினாலும், அவன் விருப்பத்திற்காகப் பெற்றோர்கள் சில நேரம் சம்மதிக்கின்றனர். ஆனால், சிறிய அறிவை உடைய நான், என் விருப்பப்படி எதையும் விரும்பவில்லை. நீ எதை விரும்பச் செய்தாயோ, அதையே நான் விரும்பினேன். இதுவே கருணை மிகுந்த திருநெறி என்பதை உன் திருவுளம் அறியும்.
பாடல் 4
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால் செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: நான் பல பொய்களையும் பிழைகளையும் செய்கிறேன். ஆனால், ஒரு புல் நுனிக்குக் கூடத் தீங்கு விளைவிக்கும் பிழையை நான் செய்ததில்லை. உயிர்களிடத்தில் கொண்ட கருணையால், பிழைகள் செய்யாமல் இருக்கவே கருதுகிறேன். உன் திருவடிகளை மட்டுமே விரும்புகிறேன். இதைத் தவிர வேறு எந்தப் பிழையும் நான் அறியேன்; இதை உன் திருவுளம் அறியும்.
பாடல் 5
அப்பணி முடிஎன் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: கங்கையைத் தாங்கிய சடையை உடைய அப்பனே! ஆனந்த நடனம் புரியும் அரசே! இந்த பூமியில் எனக்கு அறிவு வந்தது முதல் இன்று வரை, நீ எனக்கு என்ன பணியை இட்டாயோ, அதை மட்டுமே செய்தேன். என் விருப்பப்படி நான் எதையும் செய்யவில்லை. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நான் செய்த அனைத்தையும் உன் திருவுளம் அறியும்.
- அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி -

குணங்குடி மஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி

பராபரக்கண்ணி
குணங்குடி மஸ்தான் சாகிபு

குணங்குடி மஸ்தான் சாகிபு (1792–1838) தமிழ்நாட்டின் சிறந்த இஸ்லாமிய இறைஞானி மற்றும் சித்த புருஷர் ஆவார். இவர் உலகப் பற்றைத் துறந்து, வடசென்னையில் (ராயபுரம், தொண்டையார்பேட்டை) தவவாழ்க்கை மேற்கொண்டு, பல அற்புதங்களை நிகழ்த்தியவர். இவர் இயற்றிய "பராபரக்கண்ணி" இறைவனை நோக்கி வேண்டும் உன்னதமான பாடல்களைக் கொண்டது.


வாழ்க்கைக் குறிப்பு:

பிறப்பு: 1792-ம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு அருகிலுள்ள "குணங்குடி" என்னும் ஊர்.
இயற்பெயர்: சுல்தான் அப்துல்காதிர்.
துறவு: தனது 17-வது வயதில் இல்லற வாழ்வை வெறுத்துத் துறவறம் பூண்டார்.
தவம்: வடசென்னையின் ராயபுரம் பகுதியில் "லெப்பைக் காடு" என்ற முட்புதர்கள் நிறைந்த இடத்தில் தவவாழ்க்கை மேற்கொண்டார். இவரது சித்துக்களைக் கண்ட மக்கள் இவரை "மஸ்தான்" (இறை போதையில் திளைப்பவர்) என்றும், "தொண்டியார்" என்றும் அழைத்தனர். இவர் வாழ்ந்த பகுதியே இன்று "தண்டையார்பேட்டை" எனப்படுகிறது.
மறைவு: 1838-ம் ஆண்டு (வயது 47).

படைப்புகள்:

  • அகத்தீசர் சதகம்
  • ஆனந்தக் களிப்பு
  • நந்தீசர் சதகம்
  • நிராமயக்கண்ணி
  • பராபரக்கண்ணி
  • மனோன்மணிக்கண்ணி

பராபரக்கண்ணி - பாடல்கள் & விளக்கம்

பாடல் 1
அண்ட புவனமென்று ஆடுதிருக் கூத்தினையான் கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே! அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நான் கண்டு மகிழும்படி நீ காட்ட வேண்டும் பராபரமே!
பாடல் 2
ஆதியாய் ஆண்டவனாய் அஃபாதுவாய் நின்றபெருஞ் சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
உலகத்து முதல்வனாய், என்னை ஆட்கொண்டு அருளினவனாய், அவ்வப் பொருளாய் நின்ற பெருஞ்சோதியே! குறைவில்லாதவனாய் எங்கும் சூழ்ந்திருக்கின்றவனே! பராபரமே!
பாடல் 3
வேத மறைப் பொருளை வேதாந்தத் துட்கருவை ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
வேதத்தின் மறைப்பொருளாகவும், வேதாந்தத்தின் உட்கருத்தாகவும் இருக்கின்ற உன்னை ஓதி அறிந்தவர்கள் யாருமில்லை பராபரமே!
பாடல் 4
அண்ட புவனம் உடன்ஆகாச மென்றுசும்பிக் கொண்டமெஞ் ஞானக் கூத்தே பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
அண்டங்களில் உள்ளோரும், உலகத்தில் உள்ளோரும், வானுலகில் உள்ளோரும் துதித்துக் கொண்டாடுகின்ற உண்மை ஞானக்கூத்தே! பராபரமே!
பாடல் 5
நாவாற் புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம் பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
நாவினால் புகழ்வதற்கு எட்டாத நாயகனாய் இருக்கின்றவனே! நாதாந்த பூவாய் மலர்ந்திருக்கின்றவனே! பராபரமே!
பாடல் 6
பேராற் பெரிய பெரும்பொருளே பேதைதனக்கு யாரிருந்து பலனாமோ பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பேரால் புகழ் பெற்ற பெரிய பரம்பொருளே! ஏழையாகிய எனக்கு (நீயன்றி) யார் இருந்தும் எந்தப் பயனும் இல்லை பராபரமே!
பாடல் 7
மாறாய நற்கருணை மாவருள்சித் தித்திடவே பாராயோ வையா பகராய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
ஐயனே! எனக்கு உம்முடைய உயர்ந்த திருவருளானது கைகூடும்படி திருக்கண் திறந்து அருள வேண்டும். பராபரமே!
பாடல் 8
ஆனாலும் உன்பாதம் யாசித் திருப்பதற்குத் தானா யிரங்கியருள் தாராய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எந்தச் சூழலில் நான் இருந்தாலும் உம்முடைய திருவடிகளை யாசித்துக் கொண்டே இருப்பதற்குக் கிருபையோடு அருள் செய்ய வேண்டும். பராபரமே!
பாடல் 9
நாதாந்த மூல நடுவீட்டுக் குள்ளிருக்கு மாதவத்தோர்க் கான மருவே பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
நாத தத்துவத்திற்கு அந்தமான மூல வீட்டினுள்ளே எழுந்தருளி இருக்கின்ற தவம் உடையவர்களுக்குத் தோழனாக விளங்குகின்றாய். பராபரமே!
பாடல் 10
உடலுக்கு உயிரேஎன் உள்ளமே உன்பதத்தைக் கடலும்மலை யும்திரிந்தும் காணேன் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
என் உடலில் இருக்கின்ற உயிரே! என் மனமே! உன் திருவடிகளைத் தேடிக் கடலிலும், மலைகளிலும் திரிந்தும் காண முடியவில்லை. பராபரமே!
பாடல் 11
மந்திரத்துக்கு எட்டா மறைப் பொருளே மன்னுயிரே சேர்ந்த எழு தோற்றத்தின் சித்தே பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எந்தவிதமான மந்திரத்திற்கும் எட்டா மறைபொருளாக விளங்குபவனே! நிலை பெற்ற உயிராக இருப்பவனே! உலகத்தின் எழுவகைப் பிறவிகளிலும் நிறைந்த சித்துப் பொருளே! பராபரமே!
பாடல் 12
தனியேனுக்கு ஆதரவு தாரணியில் இல்லாமல் அனியாயம் ஆவதும் உனக்கு அழகோ பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
இந்த உலகத்தில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக இருக்கின்ற நான், உன் அருளைப் பெறாமல் அநியாயமாய் அழிவது உனக்கு அழகாகுமோ! பராபரமே!
பாடல் 13
ஓடித் திரிந்து அலைந்து உன்பாதம் காணாமல் வாடிக் கலங்குகிறேன் வராய் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எங்கெங்கோ ஓடித் திரிந்து அலைந்து உன் திருவடியைக் காணாமல் வாடுகின்றேன். நீ வந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். பராபரமே!
பாடல் 14
தூராதி தூரம் தொலைத்து மதி உன் பாதம் பாராத பாவத்தாற் பயந்தேன் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
கடக்க வேண்டிய தூரங்களை எல்லாம் கடந்து, என் அறிவினால் உன் திருவடியை நோக்காத பாவத்தினால் அச்சம் கொண்டேன். பராபரமே!
பாடல் 15
தேடக் கிடையாத் திரவியமே தேன் கடலே ஈடுனக்கு உண்டோ இறையே பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
தேடியும் கிடைக்காத திரவியம் போன்றவன் நீ! உன்னை நம்பியிருக்கும் அடியவர்களுக்கு தேன் கடலாக விளங்குபவன் நீ! இவ்வுலகில் உனக்கு ஈடாக ஒருவரும் இல்லை இறைவனே! பராபரமே!
பாடல் 16
அரிய பெரும்பொருளே அன்பாய் ஒருவார்த்தை பரிபூரணமாய்ப் பகராய் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
அருமையான பெரும்பரம்பொருளே! அன்போடு என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் மகிழ்வேன்! பராபரமே!
பாடல் 17
ஐயோஎனக்கு உதவும் ஆதரவை விட்டுவிட்டுத் தையலரைத் தேடித் தவித்தேன் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
அந்தோ! அடியேனுக்கு உதவி செய்கின்ற உன்னை வணங்காமல், பெண்களைத் தேடிச் சென்று பரிதவித்தேன்! பராபரமே!
பாடல் 18
எத்திசையும் நோக்கி விசையாத் திருக் கூத்தாய் வித்தை விளையாட்டு விளைப்பாய் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எந்தத் திசையைப் பார்த்தாலும் பொருந்தாத திருக்கூத்தாய் வித்தை செய்யும் விளையாட்டைச் செய்கின்றவனே! பராபரமே!
பாடல் 19
எப்பொழுது முன்பதத்தில் என் கருத்தே பெய்துதலுக்கு இப்பொழுதே கைப்பிடித்தான் இறையே பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எக்காலத்திலும் உன்னுடைய திருவடிகளில் என்னுடைய மனம் பதிவடைய இப்போதே அடியேனைக் கைப்பிடித்து அருள வேண்டும்! பராபரமே!
பாடல் 20
வாதுக் கடாவரும் வம்பரைப்போல் தோஷி மனம் ஏதுக் கடாவதியான் எளியேன் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
துன்பம் செய்யும் தொழில்களைச் செய்கின்ற வீண் வம்புக்காரர்களைப் போல என் மனம் எதை விரும்புகிறது? எதை நாடுகின்றது எனத் தெரியவில்லை. நான் எளியவனாக இருக்கின்றேன். நீ அருள் செய்வாய்! பராபரமே!
- பராபரக்கண்ணி நிறைவுற்றது -

நின்ற திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம்

ஆறாம் திருமுறை - திருத்தாண்டகம்
(நின்ற திருத்தாண்டகம் - பாடல்கள் 1 முதல் 5 வரை)
அருளியவர்: திருநாவுக்கரசர் (அப்பர்)
பண்: திருத்தாண்டகம்
நாடு/தலம்: பொது
ஓதுவார்: மதுரை முத்துக்குமரன்

திருநாவுக்கரசர் பெருமான் அருளிய ஆறாம் திருமுறையில், "நின்ற திருத்தாண்டகம்" என்பது இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையை (சர்வ வியாபி) விளக்கும் ஒப்பற்ற பதிகமாகும். இதில் உள்ள முதல் ஐந்து பாடல்களையும், அதன் விளக்கங்களையும் இங்கே காண்போம்.


பாடல் 1: அட்டமூர்த்தியாக நின்றவர்
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

எம்பெருமான் பெரிய நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களாகவும்; சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா (இயமானன்) ஆகிய எட்டு வடிவங்களாகவும் (அட்டமூர்த்தி) விளங்குகிறார்.

அவரே உலகில் உள்ள நன்மையாகவும், தீமையாகவும் (குற்றம்) உள்ளார். பெண்ணாகவும், ஆணாகவும், மற்றவர் உருவமாகவும், தம் உருவமாகவும் அவரே நிற்கிறார். நேற்று, இன்று, நாளை என்னும் முக்காலங்களாகவும் ஆகி, சிவந்த சடையை உடைய அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 2: அண்ட சராசரமாய் நின்றவர்
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

மண், விண், மலை என இயற்கையாகவும்; வயிரம், மாணிக்கம் என நவரத்தினங்களாகவும்; கண்ணாகவும், அக்கண்ணின் மணியாகவும் (பார்வை) ஆனவர்.

கலைகளாகவும், அக்கலைகள் உணர்த்தும் ஞானமாகவும்; பெண்ணாகவும், அப்பெண்ணுக்குத் துணையான ஆணாகவும்; பிரளய காலத்திற்கும் அப்பால் உள்ள அண்டமாகவும்; எண்ணாகவும், எழுத்துமாகவும், எழும் ஜோதியாகவும் எம் அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 3: இயற்கையும் உயிரினுமாய் நின்றவர்
கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப் புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெல்லாகி நிலனாகி நீரு மாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

கல்லாகவும், களிமண் நிலமாகவும், காடாகவும்; காவிரியாகவும், கால்வாயாகவும், உப்பங்கழியாகவும் ஆனவர்.

புல், புதர், பூண்டு எனத் தாவரங்களாகவும்; திரிபுரமாகவும், அப்புரத்தை எரித்தவனாகவும்; சொல்லாகவும், அச்சொல்லின் பொருளாகவும்; எங்கும் சுற்றி வரும் காற்றாகவும்; நெல், நிலம், நீர் என உயிர்காக்கும் பொருள்களாகவும், நெடிய சுடராகவும் அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 4: காலமும் கூற்றுவனாய் நின்றவர்
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

காற்று, மழைமேகம், மழைகாலம், பனிக்காலம், வெயில்காலம் என்னும் முக்காலங்கள்; கனவு, நனவு (விழிப்பு), இரவு (கங்குல்) என எல்லாம் ஆனவர்.

உயிரைக் கவரும் எமன் (கூற்று) ஆகவும், அந்த எமனை உதைத்தவனாகவும்; ஒலிக்கும் கடலாகவும், அக்கடலின் அரசனாகவும்; திருநீறு அணிந்த மேனியனாகவும்; நீண்ட ஆகாயமாகவும், அதன் உச்சியாகவும்; காளையை வாகனமாகக் கொண்ட செல்வனாகவும் அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 5: உறவும் சுவையுமாய் நின்றவர்
தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

தீ, நீர் மற்றும் வலிமை (திண்மை) ஆகவும்; திசைகளாகவும், அத்திசைகளின் காவல்தெய்வங்களாகவும் ஆனவர். தாயும், தந்தையும், நாம் சார்ந்து இருக்கும் துணையும் அவரே.

நட்சத்திரம், சூரியன், சந்திரன் ஆகவும்; காய், பழம் மற்றும் பழத்தில் உள்ள சுவை (இரதம்) ஆகவும், அச்சுவையை நுகர்பவனாகவும் தானே ஆகி; நீயாகவும், நானாகவும், நேர்மையாகவும் அடிகள் நின்றவாறு என்னே!

குறிப்பு: இப்பாடல்கள் அனைத்தும் இறைவன் "எல்லாம் தானாகி" நிற்கும் அத்வைத நிலையையும், சர்வ வியாபித் தன்மையையும் உணர்த்துகின்றன.

இப்பாடல்களைக் கேட்க:

- திருச்சிற்றம்பலம் -

நாலடியார் - மெய்ம்மை

நாலடியார்

அறத்துப்பால்: துறவறவியல்
பன்னிரண்டாம் அதிகாரம்: மெய்ம்மை
[அஃதாவது, உண்மை கூறுதலாம்]

மெய்ம்மை என்பது உள்ளதை உள்ளவாறு கூறுதல் ஆகும். துறவறவியலில் பொய்ாமை மிக முக்கியமான அறமாகும். நாலடியார் கூறும் மெய்ம்மை அதிகாரத்தின் 10 பாடல்களையும், அதற்கான விளக்கங்களையும் இங்கே காண்போம்.


பாடல்: 111
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத்து இயற்கை - நசைஅழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரில் குற்றம் உடைத்து.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: நிரை தொடீஇ = வரிசையாக அணிந்த வளையல்களை உடையவளே!
இசையா = கிடையாத,
ஒரு பொருள் = ஒரு பொருளை,
இல் என்றல் = இல்லையென்று சொல்லல்,
யார்க்கும் = யாவர்க்கும்,
வசை அன்று = குற்றமல்ல,
வையத்து = பூமியில்,
இயற்கை = இயல்பாகும்;
நசை = ஆசை,
அழுங்க = கெட,
நின்று ஓடி = நெடுங்காலம் அலையவைத்து,
பொய்த்தல் = (இறுதியில்) இல்லை எனப் பொய்சொல்லல்,
செய் நன்றி கொன்றாரில் = பிறர் செய்த உதவியை மறந்தவரைப் பார்க்கிலும்,
குற்றம் உடைத்து = குற்றம் உடையதாம்.
கருத்துரை: பெண்ணே! ஒருவரைப் பலகால் திரியவைத்து இல்லையென்று சொல்லல் செய்ந்நன்றி அழித்ததிலும் குற்றமுடையதாம்.
விசேடவுரை: பொய்த்தல் - எழுவாய், குற்றமுடைத்து - பயனிலை.
பாடல்: 112
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலுங் குன்றல் இலராவர் - அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தக்காரும் = பெரியோரும்,
தக்கவர் அல்லாரும் = சிறியோரும்,
தம் நீர்மை = தமது குணங்களில்,
எ காலும் = எந்நாளும்,
குன்றல் இலர் ஆவர் = குறைதல் இல்லாதவராவர்;
அக்காரம் = வெல்லத்தை,
யாவர் தின்னினும் = எவர் தின்றாலும்,
கையாது = கசக்காது;
வேம்பு = வேம்பை,
தேவர் தின்னினும் = தேவர்கள் தின்றாலும்,
கைக்கும் = கசக்கும்.
கருத்துரை: பெரியோரும் சிறியோரும் தங்கள் குணங்களில் குறைவுபடார்கள் (மாறமாட்டார்கள்).
விசேடவுரை: குன்றல் - எழுவாய், இலராவர் - பயனிலை; ஆம், உம், ஏ - அசைகள்.
பாடல்: 113
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: ஈர் குன்றம் நாட = குளிர்ந்த மலையையும் நாட்டையும் உடைய பாண்டியனே!,
ஒருவர் கால் ஆடு போழ்தில் = (செல்வமுற்று) சஞ்சரிக்கும் காலத்து,
கழி கிளைஞர் = மிகுந்த உறவினர்,
வானத்து மேல் ஆடு மீனில் = ஆகாயத்து மேலே சஞ்சரிக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கிலும்,
பலர் ஆவர் = அநேகராவார்,
ஏலா இடர் = பொருந்தாத துன்பங்களை,
உற்றக்கால் = அடைந்தால்,
தொடர்பு உடையோம் என்பார் = சம்பந்தம் உடையோம் என்று சொல்வார்கள்,
சிலர் = சிலர் மாத்திரம்.
கருத்துரை: பாண்டியனே! ஒருவர் செல்வச் செழிப்போடு திரியுங் காலத்துப் பலபேர் உறவினராவார்கள்; அவர் துன்பமடைந்த காலத்துச் சிலபேர் உறவினராவார்கள்.
விசேடவுரை: கிளைஞர் - எழுவாய், ஆவர் - பயனிலை; சிலர் - எழுவாய், என்பார் - பயனிலை.
பாடல்: 114
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் - எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: வடு இலா வையத்து = குற்றமில்லாத பூமியில்,
மன்னிய மூன்றில் = நிலைபெற்ற (அறம், பொருள், இன்பமென்னும்) மூன்றனுள்,
நடுவணது எய்த = நடுவாகிய பொருளைப் பொருந்த,
இருதலையும் = (முதல் மற்றும் கடையான) தருமமும் காமமும்,
எய்தும் = அடையும்;
நடுவணது எய்தாதான் = பொருளை அடையாதவன்,
உலை பெய்து = உலையில் போட்டு,
அடுவது போலும் துயர் = (ஆமையைக்) கொல்லுதல் போன்ற துன்பத்தை,
எய்தும் = அடைவான்.
கருத்துரை: பொருளை அடைந்தவன் புண்ணியத்தையும், இன்பத்தையும் அடைவான்; பொருளை அடையாதவன் துன்பத்தை அடைவான்.
பாடல்: 115
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே ஆயினுஞ் செல்வர்வாய்ச் - சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: நல் ஆவின் கன்று ஆயின் = நல்ல பசுவின் கன்றானால்,
நாகும் விலை பெறூஉம் = இளங்கன்றும் விலை பெறும்;
கல்லாரே ஆயினும் = கல்லாதவரானாலும்,
செல்வர் வாய் சொல் செல்லும் = ஐசுவரியவான்கள் வாக்கிற் பிறக்கும் சொற்கள் செல்லும்;
நல்கூர்ந்தார் சொல் = வறியவர் வாக்கிற் பிறக்கும் சொற்கள்,
புல் ஈரம் போழ்தின் = அற்ப ஈரம் பொருந்திய காலத்தில்,
உழவே போல் = உழும் உழுபடைச் சால் போல,
மீது ஆடி செல்லா ஆம் = மேலாடிச் செல்ல மாட்டாவாம் (ஆழப் பதியாது).
கருத்துரை: செல்வவான்கள் சொற்கள் செல்லும் (எடுபடும்), தரித்திரர் சொற்கள் செல்லாவாம்.
பாடல்: 116
இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் மடங்காதார் என்றும் மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தடம் கண்ணாய் = விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!
உப்பொடு நெய் பால் தயிர் காயம் = உப்புடன் நெய்யும் பாலும் தயிரும் பல காயங்களும்,
பெய்து அடினும் = இட்டு சமைத்தாலும்,
பேய்ச்சுரையின் காய் கைப்பு அறா = பேய்ச்சுரைக்காயின் கசப்பு நீங்காது;
(அதுபோல), மெய் ஞானம் = உண்மை ஞான நூல்களை,
என்றும் இடம்பட கற்பினும் = எந்நாளும் விரிவாகக் கற்றாலும்,
அடங்காதார் என்றும் அடங்கார் = அடங்காதவர்கள் எந்நாளும் அடங்கார்.
கருத்துரை: பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.
அவிநயர் சூத்திரம்:
“குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்
முதற்பா தனிச்சொலி னடிமூஉ யிருவகை
விகற்பி னடப்பது நேரிசை வெண்பா.”
- இஃது இவ்விதியால் நேரிசை வெண்பா.

பாடல்: 117
தம்மை இகழ்வாரைத் தாம்அவரின் முன்இகழ்க என்னை? அவரொடு பட்டது - புன்னை விறல்பூ கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: புன்னை விறல் பூ கமழ் கானல் = புன்னையினது மிக்க பூக்களின் மணம் கமழ்கின்ற சோலையையும்,
வீங்கு நீர் சேர்ப்ப = நிறைந்த நீரினையும் கடற்கரையையும் உடைய பாண்டியனே!
உறல் பால யார்க்கும் உறும் = வருபவை யாவருக்கும் வருமாதலால்,
தம்மை இகழ்வாரை = தங்களை இகழ்பவர்களை,
தாம் அவரின்முன் இகழ்க = தாங்கள் அவர்களின் முன்பாக இகழக்கடவர்கள்,
அவரோடு பட்டது என்னை? = அவர்கள் பின்னால் இகழப்பட்ட தன்மை என்ன?
கருத்துரை: பாண்டியனே! தங்களை இகழ்ந்தவர்கள் முன்பாகத் தாங்கள் இகழக்கடவர்கள்! அவர்கள் பின் இகழ்வதென்ன?
பாடல்: 118
ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: ஆ வேறு உருவின ஆயினும் = பசுக்கள் வேறுபட்ட உருவங்களை உடையனவாயினும்,
ஆ பயந்த பால் = அப்பசுக்கள் கொடுத்த பாலெல்லாம்,
வேறு உருவின அல்ல ஆம் = வேறுபட்ட உருவங்களையுடையன அல்லனவாம் (ஒரே வெண்மை);
பால் போல் = அப் பால் போல,
அறம் நெறி = அறத்தினது வழி,
ஒரு தன்மைத்து ஆகும் = ஒரு தன்மையையுடையது ஆம்,
ஆ போல் ஈங்கு = அப் பசுக்கள் போல ஈங்கு உண்டாகிய சமயங்களும்,
பல உருவு கொளல் = பல வேடங்களைக் கொண்டிருக்கும்.
கருத்துரை: பசுக்களெல்லாம் வேறுருவானாலும் பாலெல்லாம் ஓருருவே; அதுபோல, சமயங்கள் பலவாயினும் அறநெறி ஒருவழியாகும்.
அகத்தியச் சூத்திரம்:
“முதலு மூன்று நாற்சீ ராகியும்
இரண்டு மீறு முச்சீ ராகியும்
தனிச்சொற் சீர்கொளு நேரிசை வெண்பா.”

பாடல்: 119
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார் - யாஅர் இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர் கடைபோகச் செல்வம்உய்த் தார்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தேரும்கால் = ஆராயுமிடத்து,
உலகத்து ஓர் சொல் இல்லார் யார் = உலகில் ஓர் நிந்தைச் சொல்லை இல்லாதவர் யாவர்?,
உபாயத்தின் வாழாதார் யார் = (முற்பிறப்பில் தவஞ்செய்த) உபாயத்தால் (இப்பிறப்பில்) வாழாதார் யாவர்?,
இடை ஆக இன்னாதது எய்தாதார் யார் = இதற்கு முன் துன்பத்தை அடையாதவர் யாவர்?,
கடைபோக செல்வம் உய்த்தார் யார் = முடிவளவும் செல்வத்தை செலுத்தினவர் யார்தாம்? (ஒருவருமில்லை).
கருத்துரை: உலகத்தில் ஒரு நிந்தையேனும் அடையாதார் யார்? வாழாதார் யார்? யார் துன்பம் அடையாதார்? யார் முற்றுஞ் செல்வம் பெற்றார்? (யாரும் இல்லை).
பாடல்: 120
தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரில் பிறிதில்லை - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயன்இன்றே கூற்றம் கொண்டு ஓடும் பொழுது.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: கூற்றம் = கூற்றுவன் (எமன்),
கொண்டு ஓடும்பொழுது = தமது உயிரைக் கொண்டு போங் காலத்தில்,
ஆங்கு தாம் போற்றி புனைந்த உடம்பும் = அவ்விடத்து தாங்கள் காத்து அழகுசெய்த சரீரமும்,
பயன் இன்றி = பிரயோசனம் இல்லை;
யாங்கணும் தேரில் = எக்காலத்தாயினும் ஆராய்ந்தால்,
தாம் செய் வினை அல்லால் = தாங்கள் செய்த (நல்வினை தீவினை) இருவினையும் அல்லாது,
தம்மொடு செல்வது = தம்முடனே கூடப்போவது,
பிறிது இல்லை = வேறொன்றுமில்லை.
கருத்துரை: தாங்கள் செய்த நல்வினை தீவினையே தங்களோடுகூட வரும்; உடம்பு வராது.
விசேடவுரை: வினை - எழுவாய், பிறிதில்லை - பயனிலை.
- மெய்ம்மை அதிகாரம் முற்றும் -

திருக்குறள் - அறன்வலியுறுத்தல்

திருக்குறள்: அறன்வலியுறுத்தல்

(கட்டுரை | குறள் விளக்கம் | வினாடி வினா)

1. முன்னுரை

மனிதர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுத்துக் கூறுவது அறம் ஆகும். நல்ல செயல்களைச் செய்வதும், தீய செயல்களை விலக்குவதுமே அறவாழ்க்கை. "அறத்தின் வழி நின்றால் வாழ்வு சிறக்கும்" என்பதை வலியுறுத்தும் 'அறன்வலியுறுத்தல்' அதிகாரம் கூறும் கருத்துகளை இக்கட்டுரையில் காண்போம்.

▼ மேலும் வாசிக்க (கட்டுரை, குறள்கள் & வினாடி வினா)

2. கட்டுரை: அறத்தின் சிறப்பு

திருவள்ளுவர் குறிப்பு:

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் கருத்துகள் உலகம் முழுவதற்கும் பொதுவானவை என்பதால் இவரை 'உலகப் புலவர்' என்றும், திருக்குறளை 'உலகப் பொதுமறை' என்றும் அழைக்கிறோம்.

அறமே செல்வம்:

அறம் என்பது நமக்குச் சிறப்பையும் தரும்; செல்வத்தையும் தரும். உலகில் ஒரு மனிதனுக்கு நன்மை தரக்கூடியது அறத்தை விட வேறு எதுவும் இல்லை. அதேபோல, அந்த அறத்தைச் செய்ய மறப்பதை விடப் பெரிய தீமை வேறு எதுவும் இல்லை.

மனத்தூய்மை:

அறம் என்பது வெளியே வேஷம் போடுவது அல்ல. உள்ளத்தில் தூய்மையாக இருப்பதே முக்கியம். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, மனதில் குற்றமில்லாமல் இருப்பதே உண்மையான அறம்; மற்றவை வெறும் ஆரவாரம்.

விலக்க வேண்டிய நான்கு தீமைகள்:
நாம் நல்லவர்களாக வாழ வேண்டுமென்றால் பின்வரும் நான்கு குணங்களை விட்டுவிட வேண்டும்:
  1. பொறாமை (அழுக்காறு)
  2. பேராசை (அவா)
  3. கோபம் (வெகுளி)
  4. கடுஞ்சொல் (இன்னாச்சொல்)

முடிவுரை:

வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் வேண்டுமானால் நாம் அறவழியில் நடக்க வேண்டும். திருவள்ளுவர் கூறியது போல, மனதில் மாசு இல்லாமல், நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்வோம்.

3. 10 குறள்கள் & விளக்கம்

1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31)

விளக்கம்: அறம் சிறப்பையும் தரும்; செல்வத்தையும் தரும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு எதுவுமில்லை.

2. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)

விளக்கம்: ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை; அந்த அறத்தைப் போற்றாமல் மறப்பதை விடக் கொடியதும் இல்லை.

3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)

விளக்கம்: நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)

விளக்கம்: தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை.

5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (35)

விளக்கம்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்.

6. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)

விளக்கம்: ‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும்.

7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)

விளக்கம்: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)

விளக்கம்: செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.

9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)

விளக்கம்: அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.

10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. (40)

விளக்கம்: ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.


4. 🧠 வினாடி வினா (Quiz)

1. அறம் ஒருவருக்கு எவற்றையெல்லாம் தரும்?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: சிறப்பும், செல்வமும்.

2. உயிருக்கு மிகப்பெரிய கேடு (தீமை) எது?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: அறத்தை மறப்பது.

3. அறச்செயல்களை எவ்விடங்களில் செய்ய வேண்டும்?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: செய்ய முடிந்த இடங்கள் (வழிகள்) எல்லாவற்றிலும்.

4. 'ஆகுல நீர பிற' என்பதன் பொருள் என்ன?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: ஆரவாரத் தன்மை உடையவை (மனத்தூய்மை இல்லாதவை).

5. கீழ்க்கண்டவற்றில் அறத்திற்குத் தடையான ஒன்று எது?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: அழுக்காறு (பொறாமை) / அவா (பேராசை) / வெகுளி (சினம்) / இன்னாச்சொல்.

6. நாம் செய்யும் அறம் எப்போது நமக்குத் துணையாக நிற்கும்?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: இறக்கும் காலத்தில் (பொன்றுங்கால்).

7. 'சிவிகை' என்பதன் பொருள் என்ன?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: பல்லக்கு.

8. எது பிறவி வழியை அடைக்கும் கல் போன்றது?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: இடைவிடாமல் செய்யும் அறம்.

9. எதன் மூலம் வருவதே உண்மையான இன்பம்?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: அறத்தின் மூலம் (அறத்தான் வருவதே).

10. 'உயற்பாலது' (விலக்கத்தக்கது) என்று வள்ளுவர் எதைக் கூறுகிறார்?

விடையைக் காண இங்கே சொடுக்கவும் 👇

விடை: பழிச்செயல்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

அம்மா - இளம்பிறை

கவிஞர் இளம்பிறை, தனது வாழ்வின் அனுபவங்களையும், சவால்களையும், சமூகச் சிந்தனைகளையும் கவிதைகளாகப் படைத்து, தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். எளிமையான குடும்பப் பின்னணியில் பிறந்து, கல்வியிலும், இலக்கியத்திலும் சாதித்த அவரது பயணம், பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

அது ஒரு காலம் கண்ணே.... - வைரமுத்து

வைரமுத்து (பிறப்பு: 13 ஜூலை 1953) தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்திருப்பவர். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர், தனது படைப்புகளின் மூலம் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தவர். இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்று, தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தந்தை மகற்காற்றும் உதவி… - புவியரசு

புவியரசு, சமகாலத் தமிழ்க் கவிதை உலகில் தனித்துவமானதொரு ஆளுமை. கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட இவர், தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை. 2009 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற புவியரசு, தனது படைப்புகளாலும், மொழிபெயர்ப்புகளாலும், சமூகப் பார்வைகளாலும் வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

கதறுகிறேன் - தேனரசன்

தேனரசன் ஒரு தமிழாசிரியர். வானம்பாடி, குயில், தென்றல் போன்ற பல இதழ்களில் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். சமுதாயச் சிக்கல்களைத் தனது கவிதைகளில் எள்ளல் சுவையோடு வெளிப்படுத்துவது அவரது தனிச்சிறப்பு. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகியவை அவர் எழுதிய குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள்.

ஒப்பிலாத சமுதாயம் - அப்துல் ரகுமான்

 அறிமுகம்

"கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களில் ஒருவராகவும், புதுக்கவிதைத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்டவராகவும் அவர் திகழ்ந்தார். ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பரப்பியதிலும் இவருக்கு முக்கிய பங்குண்டு. கவியரங்கக் கவிதைகள் மூலம் கேட்போரை வசீகரித்த இவர், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது "ஆலாபனை" கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது பெற்றது.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

இயற்கை - சுரதா

தமிழ்க்கவிதை உலகில் உவமைக் கவிஞர் என்று போற்றப்படும் சுரதா (இயற்பெயர்: இராசகோபாலன்) அவர்கள், மரபுக் கவிதைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, உவமைகளால் தமிழுக்கு அணி சேர்த்தவர். அவரது வாழ்க்கை, கவிதைப் பணி, மற்றும் தமிழ்த் தொண்டுகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

வியாழன், 31 ஜூலை, 2025

நெய்வேலி நாம் பெற்ற பேறு - தமிழ்ஒளி

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் கவிஞர் தமிழ்ஒளி. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவராகவும், பாரதியாரின் வழித்தோன்றலாகவும் போற்றப்படும் இவர், தனது கவிதைகள் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் துணிச்சலுடன் வெளிப்படுத்தினார். 'நெய்வேலி நாம் பெற்ற பேறு' போன்ற அவரது படைப்புகள், சமூக மாற்றத்திற்கான அவரது ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்துகின்றன.

விடுதலை - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) தமிழின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகவும், புரட்சிகரமான சிந்தனையாளராகவும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தனது எளிமையான பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டுசென்ற பாடலாசிரியராகவும் போற்றப்படுகிறார். அவரது பாடல்கள் இன்றும் காலம் கடந்தும் சமூக சிந்தனைகளையும், விழிப்புணர்வையும் விதைத்து வருகின்றன.

புதன், 30 ஜூலை, 2025

மொழியுணர்ச்சி - முடியரசன்

அறிமுகம்

தமிழிலக்கியப் பரப்பில், மொழிப்பற்றும் புரட்சிகரச் சிந்தனைகளும் கொண்ட கவிஞராகத் திகழ்ந்தவர் வீறுகவியரசர் முடியரசன். 'முடியரசன்' என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட துரைராசு, தனது கவிதைகளாலும் வாழ்வியல் நெறிகளாலும் தமிழ் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களால் பெரிதும் போற்றப்பட்ட இவர், தமிழின் பெருமையையும் தன்மானத்தையும் உயர்த்திப் பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

சிறுத்தையே வெளியில் வா! - பாரதிதாசன்

பாரதிதாசன், தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடிகளுள் ஒருவராகவும், திராவிட இயக்கத்தின் கருத்தியலைத் தன் கவிதைகள் மூலம் பரப்பிய புரட்சிக்கவிஞராகவும் போற்றப்படுபவர். 'புரட்சிக்கவிஞர்', 'பாவேந்தர்' என்றெல்லாம் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுச்சேரியில் பிறந்த இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகத் தன் பெயரை 'பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டார். இவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் கவிதைகளில் ஒன்றுதான் 'சிறுத்தையே வெளியில் வா!'

நாட்டு வணக்கம் - பாரதியார்

பாரதியார் என்று பரவலாக அறியப்படும் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர். நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடியாகக் கருதப்படும் இவர், தமிழின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார். "மகாகவி" என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார்.

தமிழ்த் தெய்வ வணக்கம் - பெ.சுந்தரனார்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் 

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் 

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! 

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...