செவ்வாய், 17 மார்ச், 2026

வாரம் 4: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-4)த

📜 வாரம் 4: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-4) | Tolkappiyam Nunmarabu Python Text-4

வாரம் 4: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-4)

Tolkappiyam - Nunmarabu (Python Text-4)

முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி

தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர்,

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641042.

அறிமுகம்

முந்தைய வகுப்பில் பைத்தான் அடிப்படையிலான உரைத் தொடர்ச்சியை இப்பாடம் முன்வைக்கின்றது. இதில் தொல்காப்பிய நூற்பா 9-ற்கு ஆணைத்தொடர் (Algorithm) உருவாக்கிப் பைத்தான் நிரல் எழுதும் வழிமுறை இடம்பெற்றுள்ளது.

மெய் எழுத்தினை நிரலாக எழுதும் முயற்சி

மெய் எழுத்திற்குரிய விதியை நூற்பா 9இல் விளக்குகின்றார். அதனை விளக்குவதற்கு முன்பு, சென்ற வகுப்பில் சொல்லிய அடிப்படைப் பைத்தான் குறிச்சொற்களை மீண்டும் இங்கு அறிவோமா?

சரி ஐயா…
  • input - இது பயனரிடமிருந்து தரவைப் பெறுவதற்குப் பயன்படுகின்றது.
  • if - ஒன்றை ஆய்வுசெய்ய பயன்படுகின்றது.
  • in - பயனர் தரக்கூடிய குறிப்பு, ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ளதா எனக் கண்டறிய உதவுகின்றது.
  • elif - if என்பதில் தரப்பெற்ற குறிப்புத் தவறு என்றால் இன்னொரு மாறியில் உள்ள பட்டியலைச் சரிபார்த்துப் பயனர் தந்த குறிப்புச் சரியானதா என உறுதிப்படுத்த இது பயன்படும்.
  • else - if, elif ஆய்விற்குப் பின்பு பயனர் தந்த குறிப்புத் தவறு என்றால். இந்தக் குறிச்சொல்மூலம் அதனைத் தெரிவிக்க உதவுகின்றது.
இவற்றை எல்லாம் ஒருமுறை நினைவுப்படுத்திப் பார்த்துக் கொண்டேன் ஐயா.

மிக்க மகிழ்ச்சி. அதனை வைத்தே இனிவரும் நூற்பா 9-ற்கும் நிரல் எழுதிப் பழகலாம். அந்த நூற்பா வருமாறு:-

நூற்பா 9 - மெய் எழுத்துக்கள்
னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப (நூற்பா 9)

இந்த நூற்பாவில் சொல்லப்பெற்ற கருத்தியலுக்கு எந்தெந்த தன்மைகளில் விளக்கலாமென ஒரு ஆணைத்தொடர் (Algorithm) எழுத வேண்டும். தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு 9ஆம் நூற்பாவிற்கு ஒரு ஆணைத்தொடர் உருவாக்குவோமா?

சரி ஐயா. அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் என்ன? ன எனும் எழுத்துவரை பதினெட்டு எழுத்துக்கள் உள்ளன. அவை மெய் எழுத்துக்கள் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

அப்படி என்றால் பின்வருமாறு படிநிலை ஆணைத் தொடர்கள் எழுத வேண்டும்.

நூற்பா 9 - ஆணைத்தொடர் படிநிலைகள்
படிநிலை - 1: முதலில் தமிழ்மொழியைக் கணினி முறைக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும் என்றால், முதலில் அதற்குரிய ஓபன் தமிழ் அகராதியை நிறுவ வேண்டும்.
!pip install Open-Tamil
படிநிலை - 2: நிறுவியபின்பு ஓபன் தமிழ் அகராதியை உள்ளே வருவிக்க வேண்டும்.
import tamil
படிநிலை - 3: அடுத்து நூற்பாவில் சொல்லப்பெற்ற மெய் எழுத்துக்களைப் பட்டியலாக உருவாக்க 'மெய்_எழுத்து' எனும் மாறி உருவாக்க வேண்டும்.
மெய்_எழுத்து = ['க்', 'ங்', 'ச்', 'ஞ்', 'ட்', 'ண்', 'த்', 'ந்', 'ப்', 'ம்', 'ய்', 'ர்', 'ல்', 'வ்', 'ழ்', 'ள்', 'ற்', 'ன்']
படிநிலை - 4: அதனை விளைவாகக் காட்டுகின்றதா என எழுதி ஆய்வுசெய்ய வேண்டும்.
print(மெய்_எழுத்து)
படிநிலை - 5: மெய் எழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றைப் பட்டியல்களாகத் தனித்தனி மாறிகளில் 'மெய்_வல்லினம்', 'மெய்_மெல்லினம்', 'மெய்_இடையினம்' என எழுதிக்கொள்ள வேண்டும்.
மெய்_வல்லினம் = ['க்', 'ச்', 'ட்', 'த்', 'ப்', 'ற்']
மெய்_மெல்லினம் = ['ங்', 'ஞ்', 'ண்', 'ந்', 'ம்', 'ன்']
மெய்_இடையினம் = ['ய்', 'ர்', 'ல்', 'வ்', 'ழ்', 'ள்']
படிநிலை - 6: இவற்றை எல்லாம் ஆய்வுசெய்து பார்க்க ஒரு எழுத்தைப் பெறும் input எனும் குறியீட்டுச் சொல் தந்து, 'எழுத்தறிதல்' எனும் மாறியில் எழுத வேண்டும்.
எழுத்தறிதல் = input("எழுத்தைக் கண்டறிய ஒரு எழுத்தைத் தருக: ")
படிநிலை - 7: அதன்பிறகு if எனும் கட்டளையில் எழுதி ஆய்வுசெய்ய வேண்டும்.
if எழுத்தறிதல் in மெய்_வல்லினம்:
படிநிலை - 8: எழுத்தறிதல் எனும் மாறியில் வாங்கிய எழுத்து மெய்_வல்லினமாக இருந்தால் பின்வருமாறு விளைவினைத் தருவதாக எழுத வேண்டும்.
print("சரி. இது மெய் வல்லின எழுத்தே. பாராட்டு…")
படிநிலை - 9: வல்லின எழுத்து இல்லை என்றால் அதன்பிறகு elif எனும் கட்டளையில் எழுதி ஆய்வுசெய்ய வேண்டும்.
elif எழுத்தறிதல் in மெய்_மெல்லினம்:
படிநிலை - 10: வல்லின எழுத்து இல்லை என்றால் எழுத்தறிதல் எனும் மாறியில் வாங்கிய எழுத்து மெய்_மெல்லினமாக இருந்தால் பின்வருமாறு விளைவினைத் தருவதாக எழுத வேண்டும்.
print("சரி. இது மெய் மெல்லின எழுத்தே. பாராட்டு…")
படிநிலை - 11: மெல்லின எழுத்து இல்லை என்றால் அதன்பிறகு elif எனும் கட்டளையில் எழுதி ஆய்வுசெய்ய வேண்டும்.
elif எழுத்தறிதல் in மெய்_இடையினம்:
படிநிலை - 12: மெல்லின எழுத்து இல்லை என்றால் எழுத்தறிதல் எனும் மாறியில் வாங்கிய எழுத்து மெய்_இடையினமாக இருந்தால் பின்வருமாறு விளைவினைத் தருவதாக எழுத வேண்டும்.
print("சரி. இது மெய் இடையின எழுத்தே. பாராட்டு…")
படிநிலை - 13: மேற்கூறிய எழுத்து எதுவுமே இல்லை என்றால் அதன்பிறகு else எனும் கட்டளையில் எழுதி ஆய்வுசெய்ய பின்வருமாறு விளைவினைத் தருவதாக எழுத வேண்டும்.
else:
print("நீங்கள் எழுதிய எழுத்து மெய் வல்லினமும் இல்லை; மெல்லினமும் இல்லை, இடையினமும் இல்லை. மீண்டும் முயற்சிக்கவும்…")
முழுமையான பைத்தான் நிரல்

இவ்வாறு ஆணைத்தொடர்களின் அடிப்படையில் எழுதிய அந்த நூற்பாவிற்குரிய நிரல் பின்வருமாறு முழுமையாக அமையும்.

!pip install Open-Tamil

import tamil

மெய்_எழுத்து = ['க்', 'ங்', 'ச்', 'ஞ்', 'ட்', 'ண்', 'த்', 'ந்', 'ப்', 'ம்', 'ய்', 'ர்', 'ல்', 'வ்', 'ழ்', 'ள்', 'ற்', 'ன்']
print(மெய்_எழுத்து)

மெய்_வல்லினம் = ['க்', 'ச்', 'ட்', 'த்', 'ப்', 'ற்']
மெய்_மெல்லினம் = ['ங்', 'ஞ்', 'ண்', 'ந்', 'ம்', 'ன்']
மெய்_இடையினம் = ['ய்', 'ர்', 'ல்', 'வ்', 'ழ்', 'ள்']

எழுத்தறிதல் = input("எழுத்தைக் கண்டறிய ஒரு எழுத்தைத் தருக: ")

if எழுத்தறிதல் in மெய்_வல்லினம்:
    print("சரி. இது மெய் வல்லின எழுத்தே. பாராட்டு…")
elif எழுத்தறிதல் in மெய்_மெல்லினம்:
    print("சரி. இது மெய் மெல்லின எழுத்தே. பாராட்டு…")
elif எழுத்தறிதல் in மெய்_இடையினம்:
    print("சரி. இது மெய் இடையின எழுத்தே. பாராட்டு…")
else:
    print("நீங்கள் எழுதிய எழுத்து மெய் வல்லினமும் இல்லை; மெல்லினமும் இல்லை, இடையினமும் இல்லை. மீண்டும் முயற்சிக்கவும்…")
மாதிரி விளைவு:
['க்', 'ங்', 'ச்', 'ஞ்', 'ட்', 'ண்', 'த்', 'ந்', 'ப்', 'ம்', 'ய்', 'ர்', 'ல்', 'வ்', 'ழ்', 'ள்', 'ற்', 'ன்']
எழுத்தைக் கண்டறிய ஒரு எழுத்தைத் தருக: க்
சரி. இது மெய் வல்லின எழுத்தே. பாராட்டு…
சரி அன்ப! இந்த வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்வோமா. பிற குறிப்புகளை அடுத்துவரும் பாடவேளையில் அறிந்துகொள்வோமா? சரி ஐயா. மிக்க நன்றி!
முடிவுரை

இதுவரை விளக்கப்பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் தொல்காப்பியம் எழுத்ததிகார நூன்மரபு ஒன்பதாவது நூற்பாவினைப் பைத்தான் நிரலாக்கமாக எழுத ஆணைத்தொடர் என்பது மிக அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ளப்பெற்றது. ஆணைத்தொடராக எழுதும்பொழுது நிரல் எழுதுவது என்பது மிக எளிய செயல்பாடு என்பதை அறிந்து கொண்டிருப்போம் அல்லவா. இனி, இதன் தொடர்ச்சியை அடுத்த பாடவேளையில் அறிவோம்.

துணைநின்றவை
📺 காணொலி விரிவுரையைப் பாருங்கள்
நான்காம் வார முழு விளக்கவுரை (காணொலி நேரம்: 38:15)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

வாரம் 8: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-8)

📜 வாரம் 8: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-8) | Tolkappiyam Nunmarabu Python Text-8 ...