செவ்வாய், 25 நவம்பர், 2025

நாலடியார் - மெய்ம்மை

நாலடியார்

அறத்துப்பால்: துறவறவியல்
பன்னிரண்டாம் அதிகாரம்: மெய்ம்மை
[அஃதாவது, உண்மை கூறுதலாம்]

மெய்ம்மை என்பது உள்ளதை உள்ளவாறு கூறுதல் ஆகும். துறவறவியலில் பொய்ாமை மிக முக்கியமான அறமாகும். நாலடியார் கூறும் மெய்ம்மை அதிகாரத்தின் 10 பாடல்களையும், அதற்கான விளக்கங்களையும் இங்கே காண்போம்.


பாடல்: 111
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத்து இயற்கை - நசைஅழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரில் குற்றம் உடைத்து.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: நிரை தொடீஇ = வரிசையாக அணிந்த வளையல்களை உடையவளே!
இசையா = கிடையாத,
ஒரு பொருள் = ஒரு பொருளை,
இல் என்றல் = இல்லையென்று சொல்லல்,
யார்க்கும் = யாவர்க்கும்,
வசை அன்று = குற்றமல்ல,
வையத்து = பூமியில்,
இயற்கை = இயல்பாகும்;
நசை = ஆசை,
அழுங்க = கெட,
நின்று ஓடி = நெடுங்காலம் அலையவைத்து,
பொய்த்தல் = (இறுதியில்) இல்லை எனப் பொய்சொல்லல்,
செய் நன்றி கொன்றாரில் = பிறர் செய்த உதவியை மறந்தவரைப் பார்க்கிலும்,
குற்றம் உடைத்து = குற்றம் உடையதாம்.
கருத்துரை: பெண்ணே! ஒருவரைப் பலகால் திரியவைத்து இல்லையென்று சொல்லல் செய்ந்நன்றி அழித்ததிலும் குற்றமுடையதாம்.
விசேடவுரை: பொய்த்தல் - எழுவாய், குற்றமுடைத்து - பயனிலை.
பாடல்: 112
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலுங் குன்றல் இலராவர் - அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தக்காரும் = பெரியோரும்,
தக்கவர் அல்லாரும் = சிறியோரும்,
தம் நீர்மை = தமது குணங்களில்,
எ காலும் = எந்நாளும்,
குன்றல் இலர் ஆவர் = குறைதல் இல்லாதவராவர்;
அக்காரம் = வெல்லத்தை,
யாவர் தின்னினும் = எவர் தின்றாலும்,
கையாது = கசக்காது;
வேம்பு = வேம்பை,
தேவர் தின்னினும் = தேவர்கள் தின்றாலும்,
கைக்கும் = கசக்கும்.
கருத்துரை: பெரியோரும் சிறியோரும் தங்கள் குணங்களில் குறைவுபடார்கள் (மாறமாட்டார்கள்).
விசேடவுரை: குன்றல் - எழுவாய், இலராவர் - பயனிலை; ஆம், உம், ஏ - அசைகள்.
பாடல்: 113
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: ஈர் குன்றம் நாட = குளிர்ந்த மலையையும் நாட்டையும் உடைய பாண்டியனே!,
ஒருவர் கால் ஆடு போழ்தில் = (செல்வமுற்று) சஞ்சரிக்கும் காலத்து,
கழி கிளைஞர் = மிகுந்த உறவினர்,
வானத்து மேல் ஆடு மீனில் = ஆகாயத்து மேலே சஞ்சரிக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கிலும்,
பலர் ஆவர் = அநேகராவார்,
ஏலா இடர் = பொருந்தாத துன்பங்களை,
உற்றக்கால் = அடைந்தால்,
தொடர்பு உடையோம் என்பார் = சம்பந்தம் உடையோம் என்று சொல்வார்கள்,
சிலர் = சிலர் மாத்திரம்.
கருத்துரை: பாண்டியனே! ஒருவர் செல்வச் செழிப்போடு திரியுங் காலத்துப் பலபேர் உறவினராவார்கள்; அவர் துன்பமடைந்த காலத்துச் சிலபேர் உறவினராவார்கள்.
விசேடவுரை: கிளைஞர் - எழுவாய், ஆவர் - பயனிலை; சிலர் - எழுவாய், என்பார் - பயனிலை.
பாடல்: 114
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் - எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: வடு இலா வையத்து = குற்றமில்லாத பூமியில்,
மன்னிய மூன்றில் = நிலைபெற்ற (அறம், பொருள், இன்பமென்னும்) மூன்றனுள்,
நடுவணது எய்த = நடுவாகிய பொருளைப் பொருந்த,
இருதலையும் = (முதல் மற்றும் கடையான) தருமமும் காமமும்,
எய்தும் = அடையும்;
நடுவணது எய்தாதான் = பொருளை அடையாதவன்,
உலை பெய்து = உலையில் போட்டு,
அடுவது போலும் துயர் = (ஆமையைக்) கொல்லுதல் போன்ற துன்பத்தை,
எய்தும் = அடைவான்.
கருத்துரை: பொருளை அடைந்தவன் புண்ணியத்தையும், இன்பத்தையும் அடைவான்; பொருளை அடையாதவன் துன்பத்தை அடைவான்.
பாடல்: 115
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே ஆயினுஞ் செல்வர்வாய்ச் - சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: நல் ஆவின் கன்று ஆயின் = நல்ல பசுவின் கன்றானால்,
நாகும் விலை பெறூஉம் = இளங்கன்றும் விலை பெறும்;
கல்லாரே ஆயினும் = கல்லாதவரானாலும்,
செல்வர் வாய் சொல் செல்லும் = ஐசுவரியவான்கள் வாக்கிற் பிறக்கும் சொற்கள் செல்லும்;
நல்கூர்ந்தார் சொல் = வறியவர் வாக்கிற் பிறக்கும் சொற்கள்,
புல் ஈரம் போழ்தின் = அற்ப ஈரம் பொருந்திய காலத்தில்,
உழவே போல் = உழும் உழுபடைச் சால் போல,
மீது ஆடி செல்லா ஆம் = மேலாடிச் செல்ல மாட்டாவாம் (ஆழப் பதியாது).
கருத்துரை: செல்வவான்கள் சொற்கள் செல்லும் (எடுபடும்), தரித்திரர் சொற்கள் செல்லாவாம்.
பாடல்: 116
இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் மடங்காதார் என்றும் மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தடம் கண்ணாய் = விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!
உப்பொடு நெய் பால் தயிர் காயம் = உப்புடன் நெய்யும் பாலும் தயிரும் பல காயங்களும்,
பெய்து அடினும் = இட்டு சமைத்தாலும்,
பேய்ச்சுரையின் காய் கைப்பு அறா = பேய்ச்சுரைக்காயின் கசப்பு நீங்காது;
(அதுபோல), மெய் ஞானம் = உண்மை ஞான நூல்களை,
என்றும் இடம்பட கற்பினும் = எந்நாளும் விரிவாகக் கற்றாலும்,
அடங்காதார் என்றும் அடங்கார் = அடங்காதவர்கள் எந்நாளும் அடங்கார்.
கருத்துரை: பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.
அவிநயர் சூத்திரம்:
“குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்
முதற்பா தனிச்சொலி னடிமூஉ யிருவகை
விகற்பி னடப்பது நேரிசை வெண்பா.”
- இஃது இவ்விதியால் நேரிசை வெண்பா.

பாடல்: 117
தம்மை இகழ்வாரைத் தாம்அவரின் முன்இகழ்க என்னை? அவரொடு பட்டது - புன்னை விறல்பூ கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: புன்னை விறல் பூ கமழ் கானல் = புன்னையினது மிக்க பூக்களின் மணம் கமழ்கின்ற சோலையையும்,
வீங்கு நீர் சேர்ப்ப = நிறைந்த நீரினையும் கடற்கரையையும் உடைய பாண்டியனே!
உறல் பால யார்க்கும் உறும் = வருபவை யாவருக்கும் வருமாதலால்,
தம்மை இகழ்வாரை = தங்களை இகழ்பவர்களை,
தாம் அவரின்முன் இகழ்க = தாங்கள் அவர்களின் முன்பாக இகழக்கடவர்கள்,
அவரோடு பட்டது என்னை? = அவர்கள் பின்னால் இகழப்பட்ட தன்மை என்ன?
கருத்துரை: பாண்டியனே! தங்களை இகழ்ந்தவர்கள் முன்பாகத் தாங்கள் இகழக்கடவர்கள்! அவர்கள் பின் இகழ்வதென்ன?
பாடல்: 118
ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: ஆ வேறு உருவின ஆயினும் = பசுக்கள் வேறுபட்ட உருவங்களை உடையனவாயினும்,
ஆ பயந்த பால் = அப்பசுக்கள் கொடுத்த பாலெல்லாம்,
வேறு உருவின அல்ல ஆம் = வேறுபட்ட உருவங்களையுடையன அல்லனவாம் (ஒரே வெண்மை);
பால் போல் = அப் பால் போல,
அறம் நெறி = அறத்தினது வழி,
ஒரு தன்மைத்து ஆகும் = ஒரு தன்மையையுடையது ஆம்,
ஆ போல் ஈங்கு = அப் பசுக்கள் போல ஈங்கு உண்டாகிய சமயங்களும்,
பல உருவு கொளல் = பல வேடங்களைக் கொண்டிருக்கும்.
கருத்துரை: பசுக்களெல்லாம் வேறுருவானாலும் பாலெல்லாம் ஓருருவே; அதுபோல, சமயங்கள் பலவாயினும் அறநெறி ஒருவழியாகும்.
அகத்தியச் சூத்திரம்:
“முதலு மூன்று நாற்சீ ராகியும்
இரண்டு மீறு முச்சீ ராகியும்
தனிச்சொற் சீர்கொளு நேரிசை வெண்பா.”

பாடல்: 119
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார் - யாஅர் இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர் கடைபோகச் செல்வம்உய்த் தார்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தேரும்கால் = ஆராயுமிடத்து,
உலகத்து ஓர் சொல் இல்லார் யார் = உலகில் ஓர் நிந்தைச் சொல்லை இல்லாதவர் யாவர்?,
உபாயத்தின் வாழாதார் யார் = (முற்பிறப்பில் தவஞ்செய்த) உபாயத்தால் (இப்பிறப்பில்) வாழாதார் யாவர்?,
இடை ஆக இன்னாதது எய்தாதார் யார் = இதற்கு முன் துன்பத்தை அடையாதவர் யாவர்?,
கடைபோக செல்வம் உய்த்தார் யார் = முடிவளவும் செல்வத்தை செலுத்தினவர் யார்தாம்? (ஒருவருமில்லை).
கருத்துரை: உலகத்தில் ஒரு நிந்தையேனும் அடையாதார் யார்? வாழாதார் யார்? யார் துன்பம் அடையாதார்? யார் முற்றுஞ் செல்வம் பெற்றார்? (யாரும் இல்லை).
பாடல்: 120
தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரில் பிறிதில்லை - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயன்இன்றே கூற்றம் கொண்டு ஓடும் பொழுது.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: கூற்றம் = கூற்றுவன் (எமன்),
கொண்டு ஓடும்பொழுது = தமது உயிரைக் கொண்டு போங் காலத்தில்,
ஆங்கு தாம் போற்றி புனைந்த உடம்பும் = அவ்விடத்து தாங்கள் காத்து அழகுசெய்த சரீரமும்,
பயன் இன்றி = பிரயோசனம் இல்லை;
யாங்கணும் தேரில் = எக்காலத்தாயினும் ஆராய்ந்தால்,
தாம் செய் வினை அல்லால் = தாங்கள் செய்த (நல்வினை தீவினை) இருவினையும் அல்லாது,
தம்மொடு செல்வது = தம்முடனே கூடப்போவது,
பிறிது இல்லை = வேறொன்றுமில்லை.
கருத்துரை: தாங்கள் செய்த நல்வினை தீவினையே தங்களோடுகூட வரும்; உடம்பு வராது.
விசேடவுரை: வினை - எழுவாய், பிறிதில்லை - பயனிலை.
- மெய்ம்மை அதிகாரம் முற்றும் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...