செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தமிழ்விடு தூது - மதுரைச் சொக்கநாதர்

தமிழ்விடு தூது - (முதல் 25 கண்ணிகள்) 
மதுரைச்சொக்கநாதர் 
கலிவெண்பா

1. சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந் 
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 

2. டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் 
திக்கு விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 

3. செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு 
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 

4. கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர் 
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 

5. மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும் 
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே 

6. மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின் 
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் 

7. தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற் 
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி 

8. மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப் 
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் – முட்டாதே 

9. ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும் 
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் – மல்காச்சொற் 

10. பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு 
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம் 

11. தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர் 
ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும் 

12. தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு 
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் – செந்தமிழிற் 

13. பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல் 
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள் 

14. காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும் 
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங் 

15. கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர் 
எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும் 

16. என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன் 
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென் 

17. பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண் 
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறந் 

18. தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகந் 
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா 

19. தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய் 
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப் 

20. புண்ணியஞ்சே ருந்திப் புலத்தே வளிதரித்துக் 
கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித் 

21. தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம் 
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி 

22. ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று 
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே 

23. எண்முதலா கப்பகரு மீரா றெனும்பருவம் 
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணியோற் 

24. பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித் 
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு 

25. மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் 
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே

1 - 8: சீர்கொண்ட................... பகர்ந்தோரும் (பொழிப்புரை) சிறப்புப் பொருந்திய கூடலென்ற சிவராசதானியைக் காத்து அழகு பொருந்திய சங்கத்திற் புலவராயிருந்தவரும், பல திசைகளிலுஞ் சென்று போர்புரிந்து வாய்ந்த தமிழரசி யென்று பலரும் வாழ்த்தித் துதிப்பத் திசைதோறும் தன் வெற்றியைத் தோற்றுவித்த பெண்ணரசியும், விருப்பமுறும்படி திருத்தமான சிவஞானத் தொகுதியுடைய ஏட்டுச் சுவடிகளில் ஓர் ஏட்டினைக் கையிலெடுத்தெறிந்த கணபதியும், உண்மையருளால் மதுரையை அரசு புரிந்து ஒருகாலத்தில் மதுரைச் சங்கப் புலவரெதிரமர்ந்து பாடலின் சிறப்பையுணர்த்திய வேற்படையுடைய முருகக்கடவுளும், மனையை விட்டு நீங்காத இளமைவாய்ந்த மூன்றாண்டுப் பருவத்தின் வடமொழி நூல்களும் தென்மொழி நூல்களும் தாயாகிய உமையம்மையா ரூட்டிய ஞானத்தோடு கலந்த முலைப்பாலானறிந்தவரும், மூன்றாண்டுக்கு முன்னர் முதலையுண்ட பிள்ளையை மூன்று விழியார்முன் கவிபாடிப் பின்பெற்றுத் தரும்படி தமிழாலுரைத்தவரும், பிரமனும் திருமாலுந் தோன்றும்படி தேடியும் அறியமுடியாத சிவபெருமான் திருவடியைத் திரு நல்லூரிற் செய்யுள்பாடித் தம் முடியாகப் பெற்றுக் கொண்டவரும், ஆய்ந்து தம் முடியில் மணமுள்ள தாழம்பூவைச் சூடாதவராகிய சிவபெருமான் ஓலையை வாரிச் சேர்த்துத் தம் பட்டோலையில் எழுதிக் கொள்ளுமாறு செய்யுள் பகர்ந்தவரும். (விளக்கம்) கூடல் - மதுரை. சிவராசதானி மதுரை சிவபெருமான் சுந்தரராக வந்து அரசு புரிந்த இடம் ஆதலின், சங்கத்திருந்தோர் என்றது சிவபெருமானை. நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களுள் ஒருவராக (இறையனார் என்ற பெயருடையவராக) இருந்தனரென்பது வரலாறு. போர்கொண்டு என்பது திசைதோறுஞ் சென்று பல மன்னர்களுடன் போர் புரிந்ததை யுணர்த்தியது. மின்: உவமையாகு பெயராய்த் தடாதகைப் பிராட்டியாரை யுணர்த்தியது; தமிழரசி என்று ஏத்தெடுப்பத் திக்கு விசையஞ் செலுத்தியவர் அவரேயாதலின், நசை - விருப்பம். முன்னொருகாலத்திற் சிவபெருமான் உமையாளுக்குச் சிவாகமப் பொருள் கூறினர் என்பதும், அதனைப் பாராமுகமாகக் கேட்டதையுணர்ந்து வலைஞர் மகளாகப் பிறத்தி நீ என உமையைச் சபித்தனர் என்பதும், தந்தை சபித்ததை யுணர்ந்து தந்திமுகக் கணபதி ஆகமச் சுவடிகளைத் துதிக்கையாலெடுத்துக் கடலில் வீசியெறிந்தனர் என்பதும் வரலாறு. அதனாற் “கையிலெடுத்த கணபதியும்” என்றார். அதன் விரிவு திருவால. திருவிளை. வலைவீசின படலம் காண்க. பாடலறிவித்த படைவேள் என்பது முருகக்கடவுளை. முருகக்கடவுள் முன் தாடதகையின் புதல்வன் உக்கிரகுமாரபாண்டியனாக வந்து மதுரையை யாண்டு பின்னர் உப்பூர் கிழார் மகன் ஊமை உருத்திரசன்மனாக வந்து இறையனாரகப் பொருளுரைகளுள் நல்லுரை யுணர்த்தினன் என்பது வரலாறு. திருவால. ஊமை தமிழறிந்த, உக்கிரன் பிறந்த திருவிளையாடல் காண்க. மூன்றாண்டுப் பருவத்தின் அன்னை முலைப்பாலினறிந்தோர் திருஞான சம்பந்தர்; “முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்” என்ற தேவாரப்பாவால் வடகலையும் தென்கலையும் அறிந்தனர் என்பதும், ஞான முணர்ந்தனர் என்பதும் “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம், தவ முதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தாரந் நிலையில்” என்ற சேக்கிழார் திருவாய் மொழியான் உணர்க. முதலையுண்ட பிள்ளையைப் பின் ஈன்று தரச் சொல்லினிசைத்தோர் சுந்தரமூர்த்தியாவர். “கரைக் கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்பது அவர் பாடல். அடியை முடியாப் படைத்தோர் என்றது திருநாவுக்கரசரை. திருநல்லூரில் அப்பர் திருக்கோயிலிற் கண்வளரும்போது சிவபெருமான் வந்து தம் திருவடியை முடியில் வைத்தனர் என்பது வரலாறு. அதற்கு அறிகுறியாக அவ்வூரில் திருவடிநிலை உள்ளது. தாழம்பூ பிரமனுக்குச் சான்றாக வந்து பொய்கூறியதென்பதும் அன்றுமுதல் தாழம்பூவை முடியிற் புனையாது விடுத்தார் சிவபெருமான் என்பதும் பண்டை வரலாறு. மட்டு - தேன். ஓலைப்பூ - தாழம்பூ. பனையோலையை நீளமாக ஒன்றுபோலச் சேர்ப்பதை ‘வார்ந்து’ என்றார். பட்ட + ஓலை = பட்டோலை வார்ந்து சேர்த்து பட்டோலை எழுதிக் கொள்ளப் பகர்ந்தோர் எனக் கூட்டுக. பகர்ந்தோர் - மணிவாசகர். சிவபெருமான் ஒரு மறையவர் போலுருவங் கொண்டு தில்லையில் மணிவாசகப் பெருமான்பால் வந்து நின்று பாவை பாடிய வாயாற் கோவைபாடுக என்றிரந்து கோவைப்பா நானூறும் ஓலையில் வரைந்து கையெழுத்திட்டு வைத்து மறைந்தனர் என்பது அன்னார் வரலாற்று நிகழ்ச்சி இது தமிழ் விடுதூது ஆதலின் தமிழை முன்னிலைப்படுத்துச் சொக்கநாதர்மீது காதல் கொண்ட தலைவி கூறுவதாகப் பொருளமைந்துள்ளது. “தமிழே” என (கண்ணி 62) வந்துள்ள விளியை முதலில் வைத்துப் பொருள் கூட்டுக. தமிழே சங்கப்புலவர் இறையனாரும், தடாதகைப் பிராட்டியாரும், கணபதியும், படைவேளும், சம்பந்தரும், சுந்தரரும், நாவுக்கரையரும், மணிவாசகரும் “எல்லாரும் நீயா யிருந்தமையால்” (கண்ணி 15) எனக் கூட்டுக. 

8-15: முட்டாதே....................யிருந்தமையால் (பொ - ரை.) தடைபடாமல் குறையாத பெருமைத் தமிழ் மூன்றினையும் ஓதிய பெரிய முனிவனும், தொல்காப்பியம் என்ற இலக்கணத்தைக் கூறிய பழைய முனிவனும், குறையாத சொல்லமைந்த பாவின் நிலைமையைக் கொண்டு முதல்வன்பாற் செல்லும் உயிர்களை (அவற்றின் இயலை) பன்னிரண்டு நூற்பாவைக் கொண்டு முடித்த தூய்மையுடையவரும், இருவிழிகளாகிய குற்றமில்லாத கவிதை பாடும் திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர் யாவரும், குலத்தாலும் உற்ற சூழ்ச்சியாலும் நீங்காத உயிர்களைச் சாரும் வினைகளையெல்லாம் தாம் சாற்றிய மந்திரம் என்ற நூலினால் நீக்கிய வல்லவரும், செந்தமிழிற் பொய்யடிமையில்லாத புலவரென்று புலவர்களாற் புகழ்ந்து கூறப்பட்ட உண்மைத் தொண்டராகிய சங்கப் புலவர்களும், ஐயடிகள் காடவர்கோன் என்பவரும், செம்மையான (திருத்தமான) சொற்களையுடைய கழறிற்றறிவார் என்பவரும், பாடுவதற்கு அருமையான தெய்வமொழிப் பாவலரும், ஆராய்தற்கு அருமையான கல்லாத மூடர்கட்குச் சிங்கம் போன்ற கல்வி கேள்வியிற் சிறந்த எல்லாரும் நீயாயிருந்தமையால். (வி - ம்.) ஒல்கா - குறையாத. தமிழ் மூன்று - இயல், இசை, நாடகம். இவற்றை முதலில் ஓதியவர் அகத்தியர். தொல்லை + முனி = தொன்முனி. தொல்லை - பழமை, தொன்முனி: தொல்காப்பியர். அல்கா - குறையாத. மல்கா எனப் பிரித்து நிறையாத எனப் பொருள் கொள்ளலுமாம். திரம் - உறுதிநிலை. பாவின் உறுதி கொண்டு, நிலைகொண்டு என்க. பதி - கடவுள். பசு - உயிர். கடவுள்பாற் செல்லும் உயிரைப் பன்னிரண்டு நூற்பாக்களைக் கொண்டு அமைத்தவர். இவர் மெய்கண்ட தேவர். தலைவன்மேற் பாயும் பசுவைப் பன்னிரண்டு கயிற்றாற் கட்டியவர் என மற்றொரு பொருளும் வெளியே தோன்றிற்று. இதனைத் தொனிப்பொருள் என்பர். நேத்திரம் - கண். கண்ணாக விளங்குங் கவிதைகள் பாடிய திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர் என விரித்துக் கொள்க. திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடிய ஒன்பதின்மரையும் ஈண்டுக் கொள்க. திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், காடவர் கோன் பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர் என்பவர். சாதி - குலம்; உயர்வு. தந்திரம் - நூல்; சூழ்ச்சி. திருமந்திரம் என்ற நூலாற் சார்வினையை யொழித்த வல்லோர் எனக் கூட்டுக. இவர் மூலர். சங்கத்து மேலோர்; சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர். கபிலர், பரணர், நக்கீரர் முதலியவர்கள் எனக் கொள்க. ஐயடிகள் காடவர் கோன்: சேத்திரத் திருவெண்பாப் பாடியவர். கழறிற்றறிவார் சேரமான் பெருமாணாயனார். அயலார் கூறியவற்றையெல்லாம் இருந்த விடத்திலேயே அறியும் அறிவு இறைவனாலருளப்பட்டது ஆதலின் இவர் கழறிற்றறிவார் என்ற பெயர் பெற்றார். கழறிற்று - சொல்லியசொல். தெய்வ மொழிப் பாவலர் என்றது வள்ளுவரை. தேவர் எனவும் தெய்வப் புலவர் எனவும் இவர் பெயர் வழங்குவதறிக. கல்லாதார்க்குச் சிங்கம் என்று சொல்லும்படியிருக்கும் எல்லாரும் என்று விரித்துக் கொள்க. எனவே சங்கத்திருந்தோர் முதலாகத் தெய்வப் பாவலர் இறுதியாகக் கல்வி கேள்விக்குரியவர் எல்லாரும் நீயாயிருந்தமையால் எனத் தமிழ்மொழியை உயர்த்தினர் தமிழேயுருவமாக இருந்தனர் எல்லாரும்; நீ வேறு அவர்கள் வேறாக எண்ணற்க இடனில்லையென்பது கருத்து. “தமிழே” எனப் பின்னர் (கண்ணி 62) வருவதை முன்னர் வைத்துப் பொருளுரைக்க. 

15-16: சொல்லாரும்....................போற்றினேன் (பொ - ரை.) புகழ் நிறைந்த எனக்கு வாய்த்த தெய்வமே உன்னைக் கண்டு துதித்தால் என் குறைகள் எல்லாம் நீங்கும் என்று கருதி நின் பொன் போன்ற திருவடிகளையே புகலாகக் கொண்டு போற்றுகின்றேன். (வி - ம்.) சொல் ஆரும் சொற்கள் நிறைந்த என்றும் ஒரு பொருள் கூறலாம். பொன் அடி அழகிய அடி எனவும் பொருள் தரும். போற்றினேன் - வணங்குகின்றேன்; துதிக்கின்றேன். இது பின்வருமாறு துதிப்பதை யுணர்த்தியதாம். 16-19: பன்னியமென்..................வந்தாய் (பொ - ரை.) நெருங்கிய மெல்லிய பஞ்சியால் நூற்கப்படாத நூலே! பலரால் நெருடப்படாத பாவே! கிழிந்து குறைந்து அழுக்குப்படாத இயல்புள்ள கலையே! மிஞ்சிய நிறம் தோயாத செந்தமிழே! சொல்லினை ஏராகக் கொண்டுழும் புலவர் மனம் கருகாது சொல்லை விளைக்கும் செய்யுளே! ஒரு குலத்தினும் பிறவாமல் இறவாமல் உயிர்க்குயிராக நின்றாய். வந்த குலங்கள் ஐந்தாகவும் தோன்றிவளர்ந்தாய். (வி - ம்.) பஞ்சி - பஞ்சு. பன்னிய - சொல்லிய எனலுமாம். நெருடுதல் - தடவுதல். நூல் அறுந்தபோது நாவில் நக்கிக் கையால் உருட்டிப் பொருத்திப் பரப்புவது பா. கலை - ஆடை, உடை. கிழிதலும் குறைதலும் அழுக்குப் படிதலும் கலைக்குப் பொருந்திய இயல்பு. நூல்களுக்குப் பலவகை நிறம் தோய்ப்பது இயற்கை. செய்யுள் - பாட்டு; விளைநிலம். பிறந்தும் இறந்தும்வருகின்ற மக்கள் குலத்திற் பிறவாதும் இறவாதும் உயிர்க்குள்ளுயிராய்ப் பிறந்து வருகின்றாய். குலம் பிறப்பில் இல்லையெனினும் பின் ஐந்து குலமாகவும் வந்து வளர்ந்தாய். ஐந்து குலம் என்றது, ஐந்து பாக்களை: வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்பன அவற்றின் பெயர். தமிழே! நீ நூல் எனவும் பா எனவும், கலை எனவும், செய்யுள் எனவும், பெயர் பெற்றாய்; ஆயினும் அவற்றின் பண்பு நினக்கில்லை; நீ தனிப் பண்புடையாய் என்க. சொல்லேருழவர் - புலவர். சொல்லினை ஏராகக் கொண்டுழுது பொருட்பயனை மக்கள் மனத்தில் விளைப்பவர் என்ற காரணம் தோன்றிற்று. “சொல்லேருழவர் பகை” (திருக்குறள் 872) இந்நூலிற் சொல்லேருழவர் எனப் (கண்ணி 64) பின்னும் வருவது காண்க. சொல் நெல் எனவும் பொருள்படும்; ஆதலின் உழவரகம் தீயாது நெல்விளைகின்ற வயலே என மற்றுமொரு பொருள் வழங்குவது காண்க. 

19 - 22 : இருநிலத்து.................பிறந்தாய் (பொ - ரை.) பெருமை தங்கிய புவியிற் புண்ணியம் வாய்ந்த உந்தியிடத்தில் காற்றுத் தங்கிப் பின் வாக்கு ஆகிய சூற் கொண்டிருந்து தலையும் கழுத்தும் மூக்கும் மார்பும் ஆய நான்கிடத்தினும் சார்ந்து உதடும் நாக்கும் பல்லும் கெடாத மேல் வாயும் ஆய கருவிகளால் வடிவமாகித் தலையினின்று மீண்டு ஏற்குமாறு முதலெழுத்து முப்பதாகவும் சார்பெழுத்து இருநூற்று நாற்பதாகவும் நன்றாகப் பிறந்தாய். (வி - ம்.) புண்ணியம் - அறம்; தூய்மை. புண்ணியஞ் சேருந்தி என்றது நிறையுயிரின் உந்தியை. முற்செய்த புண்ணியமுடையவரே எண்வகை யுறுப்புக்குறை நீங்கிப் பிறப்பார் என்ற கருத்தினையுட் கொண்டது. உறுப்புக் குறைவில்லா உடம்பின் உந்தி எனக் கொள்க. உறுப்புக் குறைவுடைய உடம்பின் உந்தியினின்று வளி மேலெழினும் எழுத்துவடிவமாகத் தோன்றாது என அறிக. பவணந்தி முனிவர் “ிறையுயிர் முயற்சியின்” என்றதும் அக்கருத்தினை விளக்கும். வளி - காற்று. இது உதானன் என்ற காற்றினையுணர்த்தும். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவகை எனவும், அவைகள் இன்ன இன்னவிடங்களின் நிற்கும் எனவும்; உதானன் என்னும் காற்று உந்தியில் நிற்கும் என்றும் காற்றினியல் கூறும் தத்துவ நூல் கூறுவது காண்க. உந்தி - கொப்பூழ். “உந்தியிற் றோன்று முதான வளிப்பிறந்து, கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின், நாசிநாவண்ண மிதழெயிறு மூக்கெனப், பேசுமெழுத்தின் பிறப்பு” என்பர் நேமிநாத நூலுடையார். “ிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப, வெழுமணுத் திரளுரங் கண்ட முச்சி, மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின், வெவ்வேறெழுத்தொலி யாய்வரல் பிறப்பே” என்ற நன்னூற் கருத்தும் நோக்குக. வாக்கு நான்கு வகைப்படும்; பரை, மத்திமை, வைகரி, பைசந்தி என. நன்னூலிலக்கணத்தின்படி சார்பெழுத்து முந்நூற்றறுபத்தொன்பதாம், தொல்காப்பியத்தின்படி மூன்றாம், உயிர்மெய் யெழுத்துக்களைக் கூட்டினும் இருநூற்றுப் பத்தொன்பதாம். இந்நூலாசிரியர் இலக்கண விளக்கம் என்ற நூலிற் கூறியபடி தொகை காட்டினர். அந்நூலுள் உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு; உயிரளபெடை 7, ஒற்றளபெடை 11, குற்றியலுகரம் 1, குற்றியலிகரம் 1, ஆய்தம் 1, ஐகாரக் குறுக்கம் 1, ஒளகாரக் குறுக்கம் 1, மகரக் குறுக்கம் 1 எனப் பகுத்துத் தொகுத்து இருநூற்று நாற்பது என எண்ணிய முறையறிக (சூத். 5). எழுத்துக்களின் பிறப்பு மக்கட் பிறப்புப்போல வெளிப்படுமாறு வளிதரித்து, கருப்பமாய், வண்ணத்துருவாய்த் தலைதிரும்பிப் பிறந்தாய் என வமைத்திருக்கும் சொன்னயங் காண்க. 

22 - 27 : மேற்படவே.......................படிப்பிப்பாருண்டோ (பொ - ரை.) இவ்வாறு நீ பிறந்ததற்கு மேற்பட்டு எண் முதலாகச் சொல்லும் பன்னிரண்டு பகுதிகளாகச் செய்து மண்ணுலகிற் பிறந்த முதன்மையுடையோர் வளர்க்குங்காலத்தில் ஆசிரியர்கட்குக் கண்மணிபோல் விளங்கிப் பள்ளிக்கூடத்தில் அசையாம் பலப்பல தொட்டில்களிற் படுப்பித்துச் சிறுவர் கூடித் தள்ளித் தாலாட்டி உள்ளிடம் விளங்கும்படி மஞ்சளாற்றேய்த்துக் கழுவி மையிட்டு மூன்று பாலும் மிகுதியாகப் புகட்ட உயர்ந்து வளர்ந்தாய். மைந்தர்களையே பத்துப் பருவமாக்கி நீ வளர்க்கின்றாய்; அத்தகைய இயல்பு வாய்ந்த நின்னையொருவரால் வளர்த்துவிடக் கூடுமோ? கூடாதன்றோ? முதலில் நினைக்கும் கல்வியெல்லாம் நின்பாலே யுள்ளனவெனவுணர்ந்து நின்னைப் படிக்கும் இயல்புடையவரே மனிதர் எல்லாரும். உனக்குக் கற்பிப்பவர் ஒருவருண்டோ? இல்லை. (வி - ம்.) எண் முதலாக ஈராறு பருவம் என்றது: “எண் பெயர் முறைபிறப் புருவ மாத்திரை, முதலீ றிடைநிலை போலியென்றா, பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே” என நன்னூலார் எழுத்திலக்கணம் பன்னிரு பகுதியுடையது எனப் பிரித்தமையைக் குறித்தது. மண் முதலோர் என்பதை மண்ணிலுள்ள முதன்மையுடையார் என விரித்துப் புலவர்க்குப் பொருத்துக. அசை என்பது ஏட்டுச் சுவடிகளைத் தூக்கும் பலகையாம். அசையாம் தொட்டில் என உருவகமாகக் கொள்க. தால் ஆட்டி - நாவினால் அசைத்து. (ஒலித்து). அ, ஆ, இ, ஈ என ஒலிப்பதைக் காட்டிற்று. அஃது, பண்டைக் காலத்து ஏட்டுச் சுவடிகளில் எழுத்தெழுதி அவை நன்கு விளங்குவதற்கு மஞ்சளையரைத்துப் பூசுவதும் கரியைக் கரைத்துப் பூசுவதும் வழக்கமாம். இக்கருத்துக் குறிப்பால் விளங்க “ஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு” என்றார். மையிடுதல் - கரிபூசுதல் முப்பால்: அறம், பொருள், இன்பம் என்ற பொருள்களை. சிறுவர்கட்கு ஊட்ட அதனால் நீ பெருகினை யெனத் தமிழ்க்குக் கொள்க. மைந்தர் - மஞ்சர் எனப் போலியாய் நின்றது. மைந்தர் என்றது ஆண் பெண் என்ற குழந்தைகளை. பத்துப் பருவம் இட்டு வளர்த்தாய் என்றது, காப்புப் பருவ முதலாகக் கூறும் பத்துப் பருவங்களையும் இயற்றிப் பிள்ளைத் தமிழ் என்ற பேரிட்டு ஆடவர் பெண்டிர் என்ற மக்களைப் புகழால் வளரும்படி செய்தாய் என்ற கருத்தினையுட் கொண்டது. தமிழை வளர்க்கின்றேன் என்று கூறுவது பொய்யுரையும் புனைந்துரையுமாம் என்பது விளங்க “உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ” என்றார், நினையும் படிப்பு - எண்ணுங் கல்வி, கலை, எல்லாம்: எல்லாவற்றையும் உணர்வதற்கு எனச் சொல் வருவித்துக் கொள்க. மக்களை வளர்ப்பது போல வெளியே பொருள் தோன்றுமாறு பருவஞ்செய்து வளர்க்கு நாள், தொட்டிலிற் கிடத்தி, தாலாட்டி, மஞ்சட் குளிப்பாட்டி, மையிட்டு, முப்பாலும் மிகப் புகட்ட நீ வளர்ந்தாய் என்ற சொற்சுவை காண்க. முப்பால் என்பதும் பிள்ளைகட்குப் புகட்டும் தாய்ப்பால், பசுப்பால், ஆட்டுப்பால் எனப் பொருள் தருமாறு புணர்ந்திருப்பதும் காண்க.

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன