சனி, 12 மார்ச், 2022

34.முல்லை - ந.சி. கந்தையா

(இது, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது) சிறுகளும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்

கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன இருதிரி மருப்பின் அண்ணல் இரலை

செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல் மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித் தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும் பெருந்தகைக் குடைந்த நெஞ்சம் ஏமுறச்

10. செல்க தேரே நல்வலம் பெறுந பசைகொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி துறைவிட் டன்ன தூமயிரெகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில் செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி

15. இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தெ இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாணலம் பெறவே.

மதுரை மருதன் இளநாகனார்

சிறிய கரிய பிடவின் வெள்ளிய தலையுடைய குறியபுதர். கண்ணியைப் போன்று மலர்ந்திருக்கும் தண்ணிய நறிய முல்லைக் காட்டில், செருப்புத் தொட்ட கானவன் கவர்த்தடிகளைச் சுமந்து சென்றாற் போன்றது பெரிய முறுகிய கொம்புடைய தலைமை யுடைய மான், செறிந்த இலை உடைய செங்கோலறுகின் மெல்லிய கொத்துகளைப் பக்கத்தே நின்றுவிளையாடும் பெண் மானுக்கு அருத்தித் தெளிந்த நீருடைய ஆற்றின்வார்ந்த மணலுடைய கரையில் அசை இடுகின்ற கவுளதாய், உறங்குகின்ற இடத்தைப் பாதுகாக்கும் பெருந்தன்மைக்கு நெஞ்சம் உடைந்தது; பெரிய தோளுடைய கீழ்மகள் (வண்ணாத்தி) அழுக்குப் போக்கித் துறையிடத்துக்காயவிட்ட வெண்டுகில் போன்ற வெண்தூவியுடைய அன்னம் பேட்டோடு விளையாடும் காவலுடைய மனையில் சிவந்த தாருடைய கிளியை முன்கையில் எந்திய அரிவை 'பிரிந்த காதலர் இன்று வருவர் என்று கூறாய்' எனச்சொல்லிப் பின் வீட்டிலுள்ளார் அதனைக் காண்பரென நாணத்தால் அஞ்சி இனிய மழலைச் சொற்களை அதற்குப் பயிற்றுவாள். இவ்வாறு நாணுடைய அரிவையின் மாட்சிமைப்பட்ட நலனைப் பெறுவதற்கு கடும் விடவல்ல வெற்றியுடைய பாகனே தேரைச் செலுத்துக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன