திங்கள், 21 அக்டோபர், 2019

சித்திரம் பேசுதடி

காலத்தை   வென்றுநிற்கும்   மல்லப் பாடி

    கற்பாறை   குகையொளிரும்   சித்தி ரங்கள்

ஞாலத்தின்   மூத்தகுடி தமிழர்  என்னும்

    ஞாயத்தைப்  பேசுகின்ற ஆவ   ணங்கள்

கோலத்தைக்   கண்டின்றும்   வியந்து போகக்

    கொலுவிருக்கும்   பல்லவர்தம் மாமண்   டூரும்

சீலமுடன்   மாமல்ல புரத்தி   ருக்கும்

    சித்திரமும்   தமிழ்க்கலையின்   பெருமை பேசும் !

பனைமலையின்   கோவில்தம் சுவரில்   காணும்

    பசும்வண்ணக்   கந்தர்வர் சித்தி   ரங்கள்

வனைந்திருக்கும்   காஞ்சிக்கை லாச நாதர்

    வாழ்கோயில்   சோமாசின் சித்தி   ரங்கள்

நினைவிருந்தே   அகலாமல் கண்ணுக்   குள்ளே

    நிற்குதஞ்சை  பெருங்கோயில் சித்தி  ரங்கள்

புனைந்திருக்கும்   மதுரைமீ னாட்சி கோயில்

    புகழோவி   யங்கள்நம்   கலையைப் பேசும் !

சித்தன்ன   வாசல்தம் சித்தி   ரங்கள்

    சித்தத்தை   மயக்குகின்ற   அற்பு தங்கள்

வித்தையினைக்   குளமாக்கி எருமை   யானை

    விளையாட   அன்னங்கள் பறந்து  செல்லச்

சத்தத்தைக்   கேளாமல் துறவி  மூவர்

    சாய்ந்துமலர்   பறிக்கின்ற காட்சி  யெல்லாம்

இத்தரையில்   தமிழர்தம் கலைமேன்   மையை

    இயம்புகின்ற   பலவண்ண சொற்க   ளன்றோ !

(மல்லப்பாடி -  தொன்மையான பாறை  ஓவியங்கள் உள்ள இடம்.

விழுப்புரத்தின்  அருகில் உள்ள ஊர்  பனைமலை)

பாவலர்  கருமலைத்தமிழாழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன