வியாழன், 27 ஜூன், 2024

மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை

ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர்

பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்:

ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி

அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க

வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்

கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின்

பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக்

காணம் இலிஎனக் கைஉதிர்க் கோடலும்,


வங்கம் போகும் வாணிகர் தம்முடன்

தங்கா வேட்கையின் தானும் செல்வுழி,

நளிஇரு முந்நீர் வளிகலன் வௌவ

ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப

நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்


பக்கம் சார்ந்ததுஅவர் பான்மையன் ஆயினன்.

நாவாய் கேடுஉற நன்மரம் பற்றிப்

போயினன் தன்னோடு உயிர்உயப் போந்தோர்

இடைஇருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல்

உடைகலப் பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன்


சாதுவன் தானும் சாவுற் றான்என,

ஆதிரை நல்லாள் ஆங்குஅது தான்கேட்டு

ஊரீ ரேயோ ஒள்அழல் ஈமம்

தாரீ ரோஎனச் சாற்றினள் கழறிச்

சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து


முடலை விறகின் முளிஎரி பொத்தி

மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப்

புக்குழிப் புகுவேன் என்றுஅவள் புகுதலும்,

படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும்

உடுத்த கூறையும் ஒள்எரி உறாஅது


ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்

சூடிய மாலையும் தொல்நிறம் வழாது

விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த

திருவின் செய்யோள் போன்றுஇனிது இருப்பத்,

தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்


யாது செய்கேன் என்றுஅவள் ஏங்கலும்,

ஆதிரை கேள்உன் அரும்பெறல் கணவனை

ஊர்திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி

நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்

பக்கம் சேர்ந்தனன் பல்லியாண்டு இராஅன்


சந்திர தத்தன் எனும்ஓர் வாணிகன்

வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்

நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென

அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்,

ஐஅரி உண்கண் அழுதுயர் நீங்கிப்


பொய்கைபுக்கு ஆடிப் போதுவாள் போன்று

மனங்கவல்வு இன்றி மனையகம் புகுந்துஎன்

கண்மணி அனையான் கடிதுஈங்கு உறுகெனப்

புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம்

அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்


விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்.

ஆங்குஅவள் கணவனும் அலைநீர் அடைகரை

ஓங்குஉயர் பிறங்கல் ஒருமர நீழல்

மஞ்சுஉடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து

துஞ்சுதுயில் கொள்ள, அச் சூர்மலை வாழும்


நக்க சாரணர் நயம்இலர் தோன்றிப்

பக்கம் சேர்ந்து பரிபுலம் பினன்இவன்

தானே தமியன் வந்தனன் அளியன்

ஊன்உடை இவ்வுடம்பு உணவுஎன்று எழுப்பலும்,

மற்றவர் பாடை மயக்குஅறு மரபின்


கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள்

சுற்று நீங்கித் தொழுதுஉரை யாடி

ஆங்குஅவர் உரைப்போர் அருந்திறல் கேளாய்

ஈங்குஎம் குருமகன் இருந்தோன் அவன்பால்

போந்துஅருள் நீஎன அவருடன் போகி,


கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்

வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்

எண்குதன் பிணவோடு இருந்தது போலப்

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்

பாடையில் பிணித்துஅவன் பான்மையன் ஆகிக்


கோடுஉயர் மரநிழல் குளிர்ந்த பின்அவன்

ஈங்குநீ வந்த காரணம் என்என

ஆங்குஅவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும்,

அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன்

வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்


நம்பிக்கு இளையள்ஓர் நங்கையைக் கொடுத்து

வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்என,

அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து

வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்,

பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு


உண்டோ ஞாலத்து உறுபயன் உண்டு எனில்

காண்குவம் யாங்களும் காட்டுவா யாக எனத்

தூண்டிய சினத்தினன் சொல்எனச் சொல்லும்:

மயக்கும் கள்ளும் மன்உயிர் கோறலும்

கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்:


பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும்

அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டுஎன உணர்தலின் உரவோர் களைந்தனர்


கண்டனை யாகென, கடுநகை எய்தி

உடம்புவிட்டு ஓடும் உயிர்உருக் கொண்டுஓர்

இடம்புகும் என்றே எமக்குஈங்கு உரைத்தாய்

அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை

செவ்வனம் உரைஎன, சினவாது இதுகேள்


உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி

மற்றைய உடம்பே மன்உயிர் நீங்கிடில்

தடிந்துஎரி ஊட்டினும் தான்உண ராதுஎனின்

உடம்பிடைப் போனதுஒன்று உண்டுஎன உணர்நீ

போனார் தமக்குஓர் புக்கில்உண்டு என்பது


யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்

உடம்புஈண்டு ஒழிய உயிர்பல காவதம்

கடந்துசேண் சேறல் கனவினும் காண்குவை

ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை

பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ


என்றுஅவன் உரைத்தலும் எரிவிழி நாகனும்

நன்றுஅறி செட்டி நல்அடி வீழ்ந்து

கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு

உள்உறை வாழ்உயிர் ஓம்புதல் ஆற்றேன்

தமக்குஒழி மரபின் சாவுறு காறும்


எமக்குஆம் நல்அறம் எடுத்துஉரை என்றலும்,

நன்று சொன்னாய் நல்நெறிப் படர்குவை

உன்தனக்கு ஒல்லும் நெறிஅறம் உரைக்கேன்

உடைகல மாக்கள் உயிர்உய்ந்து ஈங்குஉறின்

அடுதொழில் ஒழிந்துஅவர் ஆர்உயிர் ஓம்பி,


மூத்துவிளி மாஒழித்து எவ்வுயிர் மாட்டும்

தீத்திறம் ஒழிகென, சிறுமகன் உரைப்போன்

ஈங்குஎமக்கு ஆகும் இவ்வறம் செய்கேம்

ஆங்குஉனக்கு ஆகும் அரும்பொருள் கொள்கெனப்

பண்டும் பண்டும் கலம்கவிழ் மாக்களை


உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்குஇவை

விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு

இவைஇவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து

சந்திர தத்தன் என்னும் வாணிகன்

வங்கம் சேர்ந்ததில் வந்துஉடன் ஏறி


இந்நகர் புகுந்துஈங்கு இவளொடு வாழ்ந்து

தன்மனை நன்பல தானமும் செய்தனன்,

ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்

பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென,

மனையகம் புகுந்து மணிமே கலைதான்


புனையா ஓவியம் போல நிற்றலும்

தொழுது வலம்கொண்டு துயர்அறு கிளவியோடு

அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென

ஆதிரை இட்டனள் ஆர்உயிர் மருந்துஎன்.

படம் - மணிமேகலையின் கதைமாந்தர்கள் (தமிழ் இணையக் கல்விக்கழகம் - https://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023164.htm)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன