வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ



கணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா? எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உரிய வளர்ச்சியை எய்துவிட முடியும்.
இக்காலத்தே முகநூல் (Facebook), கட்செவியஞ்சல் (Watsup) ஆகியவற்றில் நாட்டம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களை வலைப்பூ தொடங்கி எழுதுவதற்கு ஆற்றுவித்தாலே கணித்தமிழ் வளர்ச்சி பாதி விழுக்காட்டைத் தாண்டிவிடும். இதற்காகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
கணித்தமிழ்
            அதற்கு முன்பு, கணித்தமிழ் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இருபதாம் நூற்றாண்டில்தான் கணித்தமிழ் தோற்றம் கண்டது எனலாம். அன்று முதல் பல்வேறு வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றது கணித்தமிழ். கணினியில் வலைதளத்தைப் பயன்படுத்திப் பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படடுள்ளன. இதன் வளர்ச்சிக்காகத் தனிநபரும், குழுக்களும், அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன எனின் மிகையாகாது.
            இன்று கணித்தமிழ் வளர்ச்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்குக் கணித்தமிழ் ஆர்வலர்கள் உறுதுணையாக நிற்கின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பெற்று வரும் கணித்தமிழ் வளர்ச்சிப் பணிகளை
  •  பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்தளித்தல்.
  •   அரிய நூல்களை எண்மியமாக்கி (Digitization) அளித்தல்.
  •   பண்டைய நூல்களை உரையுடன் வெளியிடுதல்.
  • தேசிய மயமாக்கப்பட்ட நூல்களை ண்மியமாக்கி வெளியிடுதல்.
  •  பண்டைய இதழ்களை ண்மியமாக்கி வெளியிடுதல்.
  •   மின் அகராதி உருவாக்கித் தருதல்.
  • சொற்பிழைத் திருத்திகளை உருவாக்கி உலவவிடுதல்.
  • கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்படுத்தல்.
  • வலைப்பூ தொடங்கி எண்ணங்களைப் பதிவு செய்தல்.
  •  முகநூல், கட்செவியஞ்சல் மூலமும் கருத்துக்களைத் தமிழில் பதிவு செய்தல்.
  •  தனி வலைதளம் தொடங்கி தமிழிலக்கியங்களை அடையாளப்படுத்தல்.
  •  தனி வலைதளம் தொடங்கி இக்காலத்து வெளிவரும் ஆய்வுகளைப் பதிவுசெய்து அடையாளப்படுத்தல்.
  • அன்றாட  நிகழ்வுகளை நாளிதழ்களாக இருந்து பதிவு செய்தல்.
  • வார, மாத, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இதழ்கள் ஆரம்பித்து தமிழை வளர்த்தல்.
  • கவிதை எழுதுவதற்கும் சிறுகதை எழுதுவதற்கும் தனி வலைதளம் தொடங்கி முக்கியத்துவம் அளித்தல்.
என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
தமிழின் தட்டச்சு முறையும் இனி செய்ய வேண்டியனவும்
            கணித்தமிழாக மாற்றுவதற்குப் பெருந்துணையாக நிற்பது தட்டச்சு முறையே. தமிழைக் கணித்தமிழாக மாற்றினாலும் எழுத்துருவில் இன்னும் உலகளாவிய பொதுமுறையாக மாற்றம் பெறவில்லை. நூலாக்கப் பணிக்கு ஒரு தட்டச்சு முறையும் வலைதளத்தில் தமிழை வலையேற்றம் செய்வதற்கு  ஒரு தட்டச்சு முறையும் பின்பற்றப்படுகின்றன. இது மாறவேண்டும்.
ஒருங்குறி (Unicode) எனும் எழுத்துருவில் (Font) தட்டச்சு செய்தால் அவ்வெழுத்துரு பதிவு செய்யப்பெற்ற கணினி மட்டுமே திரையிடுகின்றது. பிற குறியீடுகளாகக் (Symbol) காண்பிக்கின்றன. இப்பிரச்சினையை முதலில் சரிசெய்ய வேண்டும். அதற்கு இது குறித்த ஆய்வுகள் நிகழ்த்தப்பெற வேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்த மட்டில் ஒருமுறை தட்டச்சு செய்தாலே போதும். அது எங்கும் எக்கணினியிலும் திரையிட்டுப் பார்க்க முடியும். வாசிக்க முடியும். ஆனால், தமிழில் அவ்வாறில்லை. NHM Writer எனும் மென்பொருளைப் (Software) பதிவிறக்கம் செய்து, கணினியில் நிறுவி, தட்டச்சு செய்து இணையத்தில் உலவச் செய்தால், அம்மென்பொருள் பதிவு செய்யப்பெற்ற கணினியில் மட்டுமே வாசிக்க முடிகின்றது. எனவே, இம்முறையை முதலில் மாற்ற வேண்டும். அதற்குச் செந்தமிழ், ஒருங்குறி, லதா, பாமினி, குறள், கம்பன் போன்ற தனித்தனியாக அமைந்திருக்கும் தட்டச்சு முறைகளை ஒருங்கு இணைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தட்டச்சு முறைகளை எழுத்தழகுகளாக (Font Style) மாற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழை ஆங்கில மொழிக்கு நிகராக கணித்தமிழாக உலவச் செய்வது எளிது என்பதை ஆய்வறிஞர்கள் உணர வேண்டும். இதற்கான முயற்சிகளை வெகுவிரைவில் தொடங்க வேண்டும்.
வலைப்பூவில் தமிழ் வளர்ச்சி
            ஒரு இணையதளம் வடிவமைத்து உலகத்தார் பார்வைக்குக் கொண்டு செல்ல குறைந்தது பத்திலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவாகின்றது. இச்செலவினத்துடன் நின்று விடுவதில்லை. மாதாந்திர, வருடாந்திர பராமரிப்புகளாக விரிந்து நிற்கவும் வாய்ப்புண்டு. இதனைப் பெரிதும் கூகுள் (google), வேர்டுபிரசு (Wordpress) போன்ற இலவச வலைதளங்கள் பூர்த்தி செய்கின்றன. இது போன்ற இலசவ வலைதளங்களைப் பயன்படுத்தி அனைவரும் தமிழை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.
            இதனை எவ்வாறு உருவாக்குவது? அதற்கு கூகுள் மின்னஞ்சல் முகவரி ஒன்றே போதும். www.blooger.com என்ற வலைதளை முகவரிக்குச் சென்று மின்னஞ்சலைத் திறக்க வேண்டும். அது வலைப்பூ உருவாக்கும் வழிறையைக் காட்டும். அதில்  வலைப்பூவின் பெயர் , வலைப்பூவிற்கான வலைதளப் பெயர் (Domain Name) மட்டும் பதிவு செய்தாலே போதும். தமக்கான வலைப்பூ உருவாகி விடும். இதில் ஒளிப்படம் (Photo), காணொளிப்படம் (Video) போல்வனவற்றையும் வெளியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
            இவ்வலைப்பூவில் அப்படி என்ன வசதி? எனக் கேட்கலாம். இதை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பதிவுகளை வாசிக்க முடியும். இவ்வசதி முகநூலிலோ கட்செவியஞ்சலிலோ கிடையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இருப்பினும் அவ்விரண்டிலும் நாட்டமுடையவர்கள்  வலைப்பூ தொடங்கி, அதில் வெளியிடக்கூடிய கருத்துக்களை இணைப்பாகத் (Link) தந்தும் வெளியிடலாம் என்பது கவனிக்கத்தக்கது.
            ஒவ்வொரு தமிழறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், இன்னும் ஆக்கப்பூர்வமான பதிவுகளும் முகநூலிலும் கட்செவியஞ்சலிலும் உலவுகின்றன. இப்பணியை ஒவ்வொருவரும் செய்தல் என்பது இயலாத ஒன்று. ஆக, இப்பதிவைத் தத்தம் பதிவிலிருந்து வலைப்பூவிற்கு ஓர் இணைப்புக் கொடுத்தாலே  போதும். அப்பதிவுகளை எளிதில் தொகுத்துப் பார்க்க ஏதுவாக அமையும். அவ்வாறு தொகுத்துப் பார்த்தவற்றைப் பின்பு விக்கிபீடியா போன்ற பொதுநல வலைதளங்களுக்குத் தரவுகளாக அளிக்க இயலும். ஏனெனின் விக்கிபீடியா இன்று அனைத்துத் தரவுகளையும் தொகுத்து வைத்திருக்கும் மாநூலாய் விளங்குகின்றது.
வலைப்பூவில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்த சில எண்ணங்கள்
          வலைதளத்தில் தமிழின் வளர்ச்சி எனப் பேசினால் விரிந்து நிற்கும். ஆயின், வலைப்பூவில் தமிழை வளர்த்தெடுக்கும் முறைகளைக் குறித்துச் சிறிது நோக்குவோம். வலைப்பதிவர்கள் தத்தம் படைப்புகளை அறிமுகப்படுத்துவதாகவும், தாம் பார்த்த, படித்த செய்திகளைப் பகிர்வதற்காகவும், பிறரின் படைப்புக் கலையை, ஆய்வுத் திறனை வெளிக்கொணர்வதற்காகவும் ஈடுபட்டு வருகின்றனர் எனலாம். இதுமட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதற்கான சில எண்ணங்கள் வருமாறு:
  • வலைப்பூ பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.
  •  கலை, பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம் என அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் வலைப்பூ பற்றி அறிமுகம் செய்து, தமிழில் எழுத ஆற்றுப்படுத்துதல்.
  • வலைப்பூ தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல்.
  • வலைப்பூ வளர்ச்சி குறித்த இணையப் போட்டிகள் நடத்துதல்.
  • தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி, அதனை வலைப்பூவில் பதிவு செய்ய அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விழிப்புணர்வு செய்தல்.
  •  வலைப்பூ இயக்கங்கள் மாவட்டந்தோறும் ஏற்படுத்துதல்.
  •  முகநூல், கட்செவியஞ்சல் ஆர்வலர்களையும் வலைப்பூ தொடங்கி எழுதத் தூண்டுதல்.
நிறைவாக, இதுபோன்ற அடிப்படைப் பணிகளை, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வெகுவிரைவில் தமிழர்தம் அடையாளங்களை, எண்ணங்களை இவ்வுலகத்தார் அறிந்து கொள்ளும்படிச் செய்ய இயலும். இதனை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டும் கணித்தமிழாய் இப்புவி எங்கும் ஓங்கும் என்பதில் ஐயமில்லை.

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671

கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு


செல்லுலகில் செல்ல
செவிகெடுக்கும் இன்னிசை
மூளைச் சலவை செய்யும்
நீலவண்ணக் காவியம்
பகுத்தறிவைப் பகடையாக்கும்
பற்பல செயலி விளையாட்டு
மதியை மதிப்பிழக்கச் செய்வன...
உணர்ந்திடு! எழுந்திடு!! விரைந்திடு!!!
வந்தோரை வரவேற்று
வருவிருந்து சிறுதானியமாம்
குழுவாய் அமர்ந்து உண்ண
குறியறிந்து கூடும்!
உழுது உழுது ஓடாய்த் தேய்ந்து
உள்ளதை இல்லையெனாது
அள்ளி அள்ளி வழங்கிய
வள்ளலே அருந்தமிழர்
உலகார் அறிய
வலைப்பூ தொடங்கு!
தமிழரின் அரிய உணவுப் பண்பாட்டைத்
தமிழால் அறிவி!
பானி பொறிக் கலவை
சுவைஞர்கள் மறக்க
சுவைத்தே வலையேற்று
சுவைக்கட்டும் சுவைக்கனியாய்
வலைப்பூ கண்ணே!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


     வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் சந்திப்பு 2015

வகை(5) இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதைப் போட்டி - 2015



கல்வி ஊற்றே சிந்தை ஊக்கும்!

(வெண்பா – வேறு)
1.      கணித்தமிழ்க் கல்வியைக் கற்றுக் கொடுக்க
கணித்தல் இலாது கணநேரம் தூங்கும்
ஒருகுழு நோக்கா ஒருகுழு பேசும்
புருவம் உயரா புகழ்!                               
(அறுசீர் விருத்தம் – வேறு)
2.      கணினிக் கலையை நோக்க கலைக்கல் லூரி நாடு!
கணித அறிவி யல்தீ கணினி வழியில் பற்று!
கண்ண ழகியாம் கன்னி கண்ணி விழியால் ஈர்க்கும்
உண்ணல் மறக்கத் தூர்க்கும் ஊன்றும் கலையும் நோக்கு! 

சனி, 19 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015


பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்

















வணக்கம் வலைப்பதிவர்களே...

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில்! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.


எந்தெந்த ஊரில் இருந்து யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று பார்க்க வருகைப் பதிவு பட்டியல் பாருங்கள்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி)
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல்,
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?

புதன், 24 ஜூன், 2015

வாசிப்பை நேசி!



கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை, நூலகம் மற்றும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘வாசிப்புத் திருநாள்’ நிகழ்வு கல்லூரி நூலகத்தில் 23.06.2015 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
            இந்நிகழ்வினை மொழித்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்கள் வாசித்தலே நம்மின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்; உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என நூல் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில்; சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறவாதீர்! என நூல்வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் ஆழப் பதித்து, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றார்.

திங்கள், 22 ஜூன், 2015

வாசிப்புத் திருநாள்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களை நூல் வாசிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் 23.06.2015 அன்று கல்லூரி நூலகத்தில் வாசிப்புத் திருநாள் நிகழவிருக்கின்றது.
இதுபோன்ற நிகழ்வுகளை அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனெனின் மாணவர்கள் வாசிப்பு என்பது பற்றிய அறிவு இன்றியே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். இதனுள் சிறுமாற்றம் நிகழ்ந்தால் அது இந்நிகழ்வின் வாகையாகும். அதனையே எதிர் நோக்குகின்றது இந்நிகழ்வு.

சனி, 16 மே, 2015

இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

இனம் பற்றி,

   
இந்தியாவில் இருந்து இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.
     அருமைத் தமிழ்ச் சொந்தங்களே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் www.inamtamil.com தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும். இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம்.

வியாழன், 7 மே, 2015

பொறுத்திரு! வாழ்வு கனிந்திடும்!

இயந்திர வரவிற்கு முன்பு மனிதன் மனிதனாய் இருந்தான். இன்று இயந்திரம் போன்று தம்மின் வாழ்க்கையையும் மனிதன் அமைத்துக் கொண்டு விட்டான். அது, இன்ப வாழ்வை இடியாய்த் தகர்த்தது தகர்த்துக் கொண்டும் வருகின்றது. எங்கும் வேகம். எதிலும் வேகம். வேகத்தின் ஊடே மனிதனின் மனமும் மயிலிறகாய் உதிர்ந்துவிட்டது. தத்தம் குழந்தைகளின் சேட்டையைக் கூட பொறுத்துக் கொள்ள மனித மனம் இடங்கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு மனிதனின் மனம் தூசாய் மன்றிவிட்டது. ஆயின், குழந்தை மனமும் நஞ்சாய் மாறிக் கொண்டிருக்கிறது. இது அழிவை நோக்கிய ஒரு பயணமே. அது எப்படி? ஒரு நல்ல நீர்க்குடத்தில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டால், அந்நீர் முழுவதும் நஞ்சாய் மாறுவது போல்வதே.

புதன், 1 ஏப்ரல், 2015

தமிழ்க்கதிர் முப்பதில் பன்முகத் தன்மை

வெண்பா என்றால் நம்மின் நினைவில் நிற்பது சங்கப் பாடல்களும் ஔவையார் பாடல்களும் காளமேகப் புலவர் பாடல்களுமே. இக்காலத்தில் புதுக்கவிதை, ஐக்கூ, ஒருவரி போல்வன கவிதைகளுக்கே சிறப்பிடம் உண்டு, பழங்கதை வடிவமான வெண்பாவில் எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அத்தகையோரில் ஒருவரே தகடூர்த் தமிழ்க்கதிர். அவர் எழுதியிருக்கும் வெண்பாக்கள் நிறைய உள. அவற்றுள் தமிழ்க் கதிர் முப்பது எனும் தொகுப்பின் சிந்தனைகளுள் பன்முகத் தன்மைகளைச் சுட்டிக்காட்டகின்றது இக்கட்டுரை.
இவரின் இத்தொகுப்பில் முப்பது வெண்பாக்கள் உள. இத்தொகுப்பு, தமிழ்வழிக் கல்வி வெண்பா விளக்கு எனும் இதழில் வெளிவந்துள்ளது. இவ்விதழின் நோக்கங்கள்: 1.தமிழ்வழிக் கல்வி வெண்பாவைத் தொடர்ந்து வெளியிடுவது, 2.வெண்பா தமிழரங்கம் எனத் தமிழ் மொழியில் பல்துறையைப் பாடுவது, 3.தமிழறிவால் உலகின் (நமது உலகம் பகுதி) மேன்மையைக் காப்பது எனும் முக்கொள்கையை உடையதாக விளங்குகின்றது (2015:2). இச்சிறப்புமிகு இதழில் வெளிவந்த தொகுப்பே தமிழ்க்கதிர் முப்பது. இத்தொகுப்பால் இடம்பெற்ற முப்பது வெண்பாக்கள் கல்விழி நூலாசிரியன் சிறப்பு, நூலின் சிறப்பு, மனிதன் வாழ வேண்டிய வழிமுறை, இயற்க்கையின் சிறப்பு, உலகப் பொதுமையை ஏற்கும் தன்மை, சங்கப்பாடல்களின் சிறப்பு, வாழ்க்கை, படைப்பாற்றல், பொதுநலம் போல்வன கருத்துக்களை மையமிட்டனவாக அமைந்துள்ளன. அவை குறித்து சிறிது விளக்குதும்.

சனி, 31 ஜனவரி, 2015

செம்மொழிக் கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தேசியக் கருத்தரங்கங்களைப் பல்வேறு நிறுவனங்களின் வழி நடத்தி வருகின்றது. அக்கருத்தரங்களில் ஆய்வுக்கே முதன்மைத் தரப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழைப் பகுதிப் பாடமாகப் பாயிலும் இளங்கலை ஆங்கிலம், தொழில் நுட்பவியல், நுண்ணியல், வணிகவியல் போல்வன துறை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்குச் சங்க இலக்கியங்களை  அறிமுகப்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இதனைப் பெற்று வெற்றி வாகை சூடிய நாயகர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்களேயாம். அதன் இறுதி நிகழ்வு முறைமைகள் வருமாறு:
கோவை - ஜனவரி - 31. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தரங்கம் 29.01.2015, 30.01.2015, 31.01.2015 ஆகிய மூன்று நாட்கள் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோவை, ஓம் சக்தி மாத இதழ் ஆசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் முதல்வர்  முனைவர் மு.இளமுருகன் அவர்கள் கருத்தரங்கம் குறித்த தனது கருத்துரையை வழங்கினார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

செம்மொழித் தேசியக் கருத்தரங்கம் - சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோவை - 641 028

     சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தினை 29.01.2015 இன்று தொடங்கியது. மேலும் இக்கருத்தரங்கம் 30.01.2015, 31.01.2015 ஆகிய இரண்டு நாட்களுக்கு  நடைபெறும்.

          இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார்.

          தொடர்ந்து கோவை, பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் தவத்திரு. மருதாசல அழகளார் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில் ஒவ்வொரு இடங்களில் நடைபெறும் கருத்தரங்கங்கள் இலக்கியங்களில் ஆழமாகச் செல்லும். இப்படி இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதுபோல் அமைந்தால் தான் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில்  சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற இக்கருத்தரங்கத்தின் தலைப்பை இன்றைய மாணவர்களுக்குப் பொருத்தமானதாக அமைவதோடு மற்ற கல்லூரிகளுக்கும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் சங்க இலக்கியங்கள் எவை எவை என்பது பற்றி எடுத்துரைத்து அவை மக்களின் வாழ்வியல் அங்கமாக விளங்கிவருவதையும் எடுத்துரைத்தார்.

புதன், 14 ஜனவரி, 2015

நூல் வெளியீடு

வணக்கம் நண்பர்களே/ கவிஞர்களே
கவிஞர் செ. பா. சிவராசன் - ஆறாம் படைப்பான " ஒருத்தி ஒருவனுக்கு " என்னும் நாவல் மற்றும்  முனைவர் சத்தியராஜ் அவர்களின் "பீச்சி " , கவிஞர் முனியசாமியின் "இலக்கணம் அறியா கவிதை " ஆகிய கீதம் பதிப்பகத்தின்  நூல்கள் 38 வது சென்னைப் புத்தககக் கண்காட்சியில் 20 -01-02015 மதியம் 1.30 மணிக்கு வெளியிட உள்ளோம் . தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் எழில் இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இவ் விழாவில் தாங்கள் நண்பர்களோடும் , குடும்பத்தோடும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம் . நன்றி
கவியன்புடன் அழைக்கும் ,
 செ.பா. சிவராசன்
 முனைவர் சத்தியராஜ்
 கவிஞர் முனியசாமி  

வெள்ளி, 9 ஜனவரி, 2015

அகராதி – வரலாறும் மொழியியலும்


வ. நதியா
முனைவர் பட்ட ஆய்வாளர்
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர் - 10



முன்னுரை
மனித சமுதாயத்தின் வாழ்க்கைமுறை, செயல்பாடு, பண்பாடு போன்றவற்றைப் பதிவுசெய்யும் கருவியாக விளங்குவது இலக்கியமாகும். இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பல்என்னும் பாடல் வரி இலக்கியத்திலிருந்து இலக்கணம் முகிழ்த்தது என்பதை உணர்த்துகின்றது. இலக்கியம் அகராதித் தொகுப்பிற்குரியச் சொற்களை வழங்கும் கருவூலமாகத் திகழ்கின்றது. அகராதிகள் இலக்கணத்தின் பின்னிணைப்பாக கருதப்பெறுகின்றன.
மொழி அமைப்பைக் கற்றல் என்ற நிலையில் கூடுதலாகச் சொற்பொருளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மரபு இலக்கணங்களிடையே நிலவி வந்துள்ளது. மொழியைக் கற்பதிலும், கற்பித்தலிலும் இலக்கணம், இலக்கியம், அகராதி என்பன கருவி நூல்களாக விளங்குகின்றன.
இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தலின் கூறுகள் ஒழுங்குபடுத்தபட்டவையாக அமையவில்லை. அவற்றை எளிமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பெற்றவை அகராதிகளாகும். அகராதிகள் மொழியில் பயன்படுத்தப்பெறும் சொற்களைப் பாதுகாத்து வைப்பதில் காப்பகமாகவும், மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் ஐயங்களை நீக்குவதில் தீh;ப்பகமாகவும் இலக்கணம், பொருள் மற்றும் பயன்பாடு தொடர;பான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றன.

சனி, 3 ஜனவரி, 2015

எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

                                                                                                                                    முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
                                                                                                                                                   தமிழ் – உதவிப் பேராசிரியர்
                                                                                                                                     இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரி
                                                                                                                                            கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

கடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம். இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.
 தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
 வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. ஆக, தொல்பழங்காலத்தில் இருந்த இந்நிலைப்பாடு பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்பும் மாறின. சமசுகிருதத்தின் ஆதிக்கம் தமிழ்மொழியின்பால் காலூன்றியது எனலாம் (க.ப.அறவாணன், 2006:121 – 126). ஆகவே, தமிழ்மொழிக்குரிய முதன்மை எழுத்துக்கள் முப்பது என்றமை, இன்று ஆய்தத்துடன் சேர்த்து முப்பத்தேழு (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ) எனக் கூறுமாறும் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று மழலையரின் தமிழ் அரிச்சுவடியிலும் இடம்பெற்றுவிட்டமை நோக்கற்பாலது. இவ்வாறு உட்புகுந்த சமசுகிருத மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல விரிந்து நின்றது. ஆகவே இன்று மாந்தர் பெயர்கள் அனைத்தும் சமசுகிருதமாகவே அமையக் காணலாம்.