சனி, 31 ஜனவரி, 2015

செம்மொழிக் கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தேசியக் கருத்தரங்கங்களைப் பல்வேறு நிறுவனங்களின் வழி நடத்தி வருகின்றது. அக்கருத்தரங்களில் ஆய்வுக்கே முதன்மைத் தரப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழைப் பகுதிப் பாடமாகப் பாயிலும் இளங்கலை ஆங்கிலம், தொழில் நுட்பவியல், நுண்ணியல், வணிகவியல் போல்வன துறை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்குச் சங்க இலக்கியங்களை  அறிமுகப்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இதனைப் பெற்று வெற்றி வாகை சூடிய நாயகர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்களேயாம். அதன் இறுதி நிகழ்வு முறைமைகள் வருமாறு:
கோவை - ஜனவரி - 31. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தரங்கம் 29.01.2015, 30.01.2015, 31.01.2015 ஆகிய மூன்று நாட்கள் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோவை, ஓம் சக்தி மாத இதழ் ஆசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் முதல்வர்  முனைவர் மு.இளமுருகன் அவர்கள் கருத்தரங்கம் குறித்த தனது கருத்துரையை வழங்கினார்.

தேசியக்கருத்தரங்கின் சிறப்புரையைக் கோவையைச் சார்ந்த சமகால வரலாற்று ஆய்வாளரான செந்தலை ஆ.கவுதமன் அவர்கள் ஆற்றினார்.
பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் தங்களின் கருத்தரங்க அனுபவங்களை எடுத்துரைத்தனர்.
 பல்வேறு இடங்களிலிருந்து இருபதிற்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் வந்து சங்க இலக்கியம் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இக்கருத்தரங்கிற்குப் பெருமை சேர்த்தனார். இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார் நன்றி கூறினார்.
முனைவர் அருவி. தேன்மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன